அப்பாடா.. 20 ராசியில்லாத நம்பர்.. இப்ப 21 ஆயிருச்சு.. நிம்மதி.. இப்படியும் ஒரு புரளி!
21-ம் எண்ணை கொண்டு இணையவாசிகள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: "அப்பாடா.. 20 ராசி இல்லாமல் இருந்தது.. இப்போ 21 ராசி ஆகிவிட்டது" என்று இணையத்தில் சிலர் பரபரப்பை கிளப்பி விட ஆரம்பித்துள்ளனர். எல்லாம் சட்டசபையில் உள்ள காலி தொகுதிகளின் கணக்குதான்.
இவ்வளவு காலம் 18 தொகுதிகள் காலி என்று இருந்தது. அதனுடன் கருணாநிதி மரணம், போஸ் மரணம் சேர்ந்து விடவும், காலி தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆனது.
கோர்ட்டில் 18 எம்எல்ஏக்கள் கேஸ் நடைபெற்று வருவதால், தேர்தல் ஆணையம் மற்ற 2 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஒன்று கூட இல்லை
அது சம்பந்தமாக யோசித்து முடிவெடுப்பதற்குள், 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பே வந்துவிட்டது. அதனால் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று திரும்பவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19 தொகுதிகளை விட்டுவிட்டு, ஒரே ஒரு தொகுதிக்குதான் இடைத்தேர்தல் என்று ஆனது. கடைசியில் அந்த ஒன்னும் இல்லாமல் போய்விட்டது.
எடுத்தேன், கவிழ்த்தேன்
மாநில அரசின் நிலைப்பாடு, தேர்தல் ஆணையத்தின் எடுத்தேன் கவிழ்த்தேன் முடிவு, மக்களை சந்திக்க தயங்கும் பிரதான கட்சிகள், ஒரே ஒரு இடைத்தேர்தலை கூட சந்திக்க பயப்படும் அரசியல் தலைவர்கள், போன்றவற்றை பொதுமக்கள் இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.
கலாய் விழுகிறது
இந்த நிலையில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீதான தீர்ப்புக்குப் பிறகு அவரது பதவியும் பறி போகிறது. இதனால் காலி தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக போகிறது. இதையும் இப்போது இணையதளங்களில் கலாய்த்து வருகின்றனர். இவ்வளவு நாள் 20 நம்பர் ராசி இல்லை.. 21தான் ராசி நம்பர் என்று சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.
|
21தான் ராசி
அரசையோ, தேர்தல் ஆணையத்தையோ குறைகூறும் எண்ணம் மக்களுக்கு இல்லை என்றாலும், தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்ற கவலையும், ஏற்கனவே 20 தொகுதிகளை வழிநடத்த பொறுப்பாளர்கள் இல்லாதபோது 21 தொகுதி காலி என்று இப்போது நிலைமை ஆகிவிட்டதே என்ற வருத்தத்தையும்தான் மக்கள் இப்படி ஆதங்கமாக இணையத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.