பக்கத்து வீட்டுக்காரர்களும் ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிறோம்.. வரமா, சாபமா இந்த 21 நாட்கள்?
சென்னை: வரமா? சாபமா? இந்த 21 நாட்கள்.. என்ற கேள்வி லாக்டவுன் காலகட்டத்தில் இயல்பாகவே உங்களுக்கு எழுந்திருக்கும். விட்டத்தை பார்த்து கொட்டாவி விட்டபடி இருந்தால், இதெல்லாம் தோணத்தான் செய்யும். இப்படியெல்லாம் கேள்விகள் வராவிட்டால் நீங்கள், ஆல்ரெடி, ஜென் நிலைக்கு போய்விட்டீர்கள் என்று அர்த்தம்.
Recommended Video
கண்டிப்பாக இந்த 21 நாட்கள் வேறு வகையில் பலர் கண்ணோட்டத்தை மாற்றியிருக்கும் என்பது யதார்த்தம். அது எப்படி என்று பாருங்கள்:
நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை, காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம், சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை. பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளை கண்களால் பார்க்க முடிகிறது.
மதுக்கடை மூடிக் கிடைக்கிறது, நகைக் கடைகள் பூட்டியே இருக்கிறது, ஜவுளிக்கடை விளம்பரங்களை செய்வதில்லை. நிரம்பி வடியும் மாநகரப் பேருந்துகள் இல்லை, படியில் தொங்கிப் பயணம் செய்ய யாரும் இல்லை. தெருவெல்லாம் சுத்தமாய் கிடக்கிறது. சாக்கடைகள் தூர்வாரப் பட்டுக்கொண்டே இருக்கிறது.
மது கிடைக்காத விரக்தி.. குளிர்பானத்தில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்த இரு மீனவர்கள் பலி
அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைக்கிறார்கள், அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை, பக்கத்து வீட்டுக்காரனும் நல்ல உடல்நிலையோடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம், எது வேண்டும் என்றாலும் வீட்டிலேயே சமைத்து உண்கிறோம்.
தேவை இல்லாமல் எதையும் வீணடிப்பது இல்லை, காவல் துறையை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம், மருத்துவரை தெய்வமாய் பார்க்க முடிந்திருக்கிறது, செவிலியரை சகோதரியாய் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம், சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறோம். சுத்தமாக இருக்கப் பழகி இருக்கிறோம்.
சிட்டு்குருவி சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன, பறவைகள் சப்தம் இப்போது பலமாய் கேட்க முடிகிறது, பொழுது சாயும் போது எந்த இரைச்சலும் இல்லை, நீ எப்படி வருவயோ என்ற பயம் உன் குடும்பத்திற்கு இல்லை. போதை தேடி யாரும் செல்வதே இல்லை. சிகரெட் தீர்ந்தும் தேடி அலைய மனமில்லை. தெருவில் எச்சில் துப்ப யோசிக்கிறோம்.
வெளிநாட்டில் இருந்து வந்ததை விளம்பரப்படுத்தி, வெளியில் சொல்ல யோசிக்கிறோம், அகந்தை அழிந்து போய் இருக்கிறது, தான் என்ற கர்வம் தளர்ந்து போய் விட்டது, சிறுவயது ஞாபகங்களை அசை போட துவங்கி இருக்கிறோம், தொட்டதிற்கு எல்லாம் மருத்துவமனை போவதை நிறுத்தி இருக்கிறோம். சிரிக்க கற்றுக் கொண்டு இருக்கிறோம், சிந்திக்க பழகி இருக்கிறோம். மற்றவர்கள் வலி புரிந்து இருக்கிறது, மனது நோகாமல் பேச பழகி இருக்கிறோம்.
இது மட்டும் போதாது, அப்பாவோடு மனம் விட்டுப் பேசுங்கள், அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குங்கள், பிள்ளைகளின் தேவை அறிந்து சொல்லிக் கொடுங்கள், மனைவியின் மனதிற்கு நெருக்கமாக இருங்கள், கணவரின் கைகளை பிடித்து நம்பிக்கை கொடுங்கள், பிரிந்த நண்பர்களின் நம்பர்களை தேடி எடுங்கள், மன்னிப்பு கேட்க நினைத்தவர்களிடம் கேட்டு விடுங்கள். யாரையாவது மன்னிக்க நினைத்தால் மன்னித்தும் விடுங்கள்.
ஒருவேளை இந்த 21 நாட்களோடு உலகம் அழிந்து போவதாய் இருந்தால் உறவுகளை எப்படி நேசித்து இருப்பீர்களோஅப்படி நேசித்து பாருங்கள். பக்கத்து வீட்டுக்காரரிடம் பகை தெரியாது. எதிர் வீட்டுகாரரின் ஏமாற்றம் புலப்படாது. எல்லோரும் நிம்மதியாக இருக்கட்டும் என்று மனம் நினைக்கும். வஞ்சம் தோன்றாது. வாழ வேண்டும் என்ற ஆசை நீண்டு இருக்கும் . வாழ்ந்து காட்ட வாய்ப்பு கிடைத்தது என்று மனம் சொல்லும்.
மீண்டும் தொடங்குங்கள், எங்கு எந்த தவறை செய்தீர்களோ, அதை திருத்திக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாக உள்ளதென்று புலம்பாதிருங்கள், வீடே இல்லாதவர்களை நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள். நீங்கள் யாரென்பதை உங்களுக்கே உணர்த்துவதற்காக ஒரு வைரஸ் தேவைப்பட்டு இருக்கிறது. உங்களை யாரும் தனித்து நிற்கச் சொல்லவில்லை. தற்காத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள். வாழ நினைத்தால் வாழ்ந்து காட்டுங்கள். வாழ்க்கை எல்லோருக்கும் ரி ஸ்டார்ட் ஆப்ஷனை கொடுப்பதில்லை. உங்களுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போ சொல்லுங்க இது வரமா? சாபமா?
இப்படி கேட்கிறது ஒரு வாட்ஸ்அப் மெசேஜ்.