மெரினா சாலையில் பைக் சாகசம்... 21 பேரை துரத்திச் சென்று பிடித்தனர் போலீசார்
சென்னை: மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பைக்குகளையும் சென்னை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் பைக் ரேஸில் ஈடுபட்ட சாந்தகுமார் என்ற இளைஞர் உயிரிழத்தார். அவருடன் வந்த நண்பர் பாலாஜி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவதும், விபத்துகளை ஏற்படுத்துவதும் வாடிக்கையான நிகழ்வாகவே மாறிப்போய்விட்டது. அதனை தடுக்கும் வகையில், போலீசார் தற்போது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாருக்கு உத்தரவு
சென்னையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபடும் நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிறுநீரகம் தானம் செய்தால் ரூ. 3 கோடி.. தனியார் மருத்துவமனையின் பெயரில் அப்பாவிகளை வளைக்கும் கும்பல்
அதிரடி சோதனை
மெரினா சாலையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் தொடர் பைக் ரேஸில் ஈடுபட்டதை தொடர்ந்து, சிறப்பு அதிரடி சோதனையில் நேற்று முன்தினம் போலீசார் ஈடுபட்டனர். காமராஜர் சாலையில் 20 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பைக் ரேஸில் ஈடுபட்ட 80 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
242 வழக்குகள் பதிவு
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 22 பேர் மீதும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்ததாக 10 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 130 வழக்குகளும் என மொத்தம் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 7 கார்கள், 16 பைக்குகள், ஒரு ஆட்டோ என மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொடர் சோதனை
இந்த நிலையில், நேற்று இரவும் 2 வது நாளாக போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, பைக் ரேஸில் ஈடுபட்ட ஏராளமான இளைஞர்கள் சிக்கினர். போலீசாரிடம் இருந்து இளைஞர்கள் தப்பி செல்வது, போலீசார் அவர்களை விரட்டி பிடிப்பது போன்ற அதிரடி காட்சிகள் அரங்கேறின. பிடிக்கும் முயற்சியில் சாலையில் விழும் இளைஞர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அருகிலே ஆம்புலன்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.
பெற்றோர் ஒத்துழைப்பு முக்கியம்
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ரேஸ் பைக்குகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் இரவு நேரங்களில் எங்கு செல்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். பெற்றோர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே பைக் ரேசை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று போலீசார் கூறுகின்றனர்.