23, 25, 32, வயது உடையவர்களும் இன்று கொரோனாவால் பலி.. ஒரே நாளில் 119 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 119 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு உயிரிழப்பு அதிகமாக உள்ளது. 23, 25, 32, வயதுடையவர்களும் கொரோனாவின் தீவிரத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 24 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், சேலத்தில் 6 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், திருவண்ணாமலையில் 6 பேரும், தூத்துக்குடியில் 6 பேரும் இன்று உயிரிழந்துள்ளனர்.
கோவை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 5 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேர் இன்று பலியாகி உள்ளனர்.
தேனி, தஞ்சையில் கொரோனா கோரத்தாண்டவம்.. மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்
4 மாவட்டங்களில் 2 பேர்
தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டையில் தலா 3 பேரும், திருப்பூர், விழுப்புரம், மதுரை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் இன்று கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், நீலகிரி, கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.
32 வயது பெண் பலி
தமிழகத்தில் இன்று உயிரிழந்த பலரும் 50 வயதை கடந்தவர்கள் ஆவர். அரியலூரில் 32 வயதுடைய பெண் கொரோனாவின் தீவிரத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மதுரை மற்றும் தேனியில் 44வயது உடையவர்கள் பலியாகி உள்ளார்கள். கடலூரில் 25 வயது பெண் பலியாகி உள்ளார். விழுப்புரத்தில் 23 வயது ஆண் பலியாகி உள்ளார். சென்னையில் 40வயது நபர் பாதிப்பு உறுதியான இரண்டே நாளில் இறந்துள்ளார். 38 வயது பெண் கிருஷ்ணகிரியில் மூச்சு திணறலால் பலியாகி உள்ளார்.
மதுரையில் 278 பேர் மரணம்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 2272 பேரும், செங்கல்பட்டில் 292 பேரும், மதுரையில் 278 பேரும், திருவள்ளூரில் 274 பேரும், காஞ்சிபுரத்தில் 142 பேரும், விருதுநகரில் 116 பேரும், கோவையில் 101 பேரும் இதுவரை பலியாகி உள்ளனர்.
தர்மபுரியில் குறைவு
தமிழகத்திலேயே மிக குறைந்த அளவாக நீலகிரி மாவட்டத்தில் 4 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். தர்மபுரியில் 7 பேரும், பெரம்பலூரில் 9 பேரும், கரூரில் 11 பேரும், நாகப்பட்டினத்தில் 11 பேரும், அரியலூரில் 11 பேரும் திருவாரூரில் 12 பேரும், ஈரோட்டில 14 பேரும் பலியாகி உள்ளனர்.