பாமகவின் 'திண்டுக்கல்' அனுபவம்.. தொகுதிகள் தேர்வில் உஷார் - தொடரும் இழுபறி
சென்னை: பாமகவுக்கு 23 சட்டமன்ற தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அதிமுக தொகுதிப்பங்கீடு சூடுபிடித்துவிட்டது. சென்னையில் இன்று முதல்வர் இல்லத்தில் அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் கிஷண் ரெட்டி, வி.கே.சிங், சி.டி.ரவி, எல்.முருகன் உள்ளிட்ட பாஜக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பாஜகவுக்கு 22 இடங்கள் ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதேபோல், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அறிவித்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி என்று பாமக கூறி வந்த நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, பாமகவுடனான கூட்டணி முடிவை அறிவித்துவிட்டு, தொகுதி பங்கீடு முடிவையும் அறிவித்திருக்கிறது அதிமுக.
அதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிக்கு ஒப்புக் கொண்டது ஏன்? அன்புமணி ராமதாஸ் விளக்கம்
அப்போது 27
அதன்படி, பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக, இப்போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் கூட்டு சேர்ந்துள்ளது. 2001 தேர்தலில், 27 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் பாமக வெற்றிப் பெற்ற நிலையில், தற்போது 23 இடங்கள் மட்டுமே பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதால், 23 இடங்களே பெற்றுக் கொண்டோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனினும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு பிறகே அது முடிவு செய்யப்படும் என்று ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
தொடரும் தோல்விகள்
பொதுவாக வட மாவட்டங்களில் வலிமையான வாக்கு வங்கிக் கொண்டிருக்கும் பாமக, அங்கு தான் அதிக தொகுதிகளை கோரியுள்ளது. எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளில், அவர்களின் கோட்டையில் (வட மாவட்டங்கள்) பாமக பெரிதளவில் எந்த வெற்றியையும் பதிவு செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
வாக்கு வங்கி
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் "மாற்றம், முன்னேற்றம், அன்புமணி" என்ற கோஷத்துடன் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கிய பாமக, வெற்றி அடிப்படையில் பெரிய அடி வாங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பென்னாகரம் தொகுதியில் 2ம் இடத்தையே பிடித்தார். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாமக தோற்றது. எனினும், 5.36 சதவிகித வாக்கு வங்கியை பெற்றது.
இந்த நிமிடம் வரை
2019 மக்களவை தேர்தலில் கூட, அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக, 7 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. செல்வாக்கு மிகுந்த தருமபுரி தொகுதியைக் கூட பாமக இழந்தது. இருந்தாலும், பாமக வாக்கு வங்கி பெரிதாக டேமேஜ் ஆகவில்லை என்ற ஒன்று மட்டுமே அக்கட்சிக்கு ஆதரவாக இந்த நிமிடம் வரை உள்ளது.
பலமில்லாத தொகுதி
வட மாவட்டங்களில் கடந்த சில வருடங்களாக இழந்த செல்வாக்கை மீண்டும் கைப்பற்றும் வாய்ப்பாக 2021 தேர்தலை பாமக கருதுகிறது. ஆனால், பாமக கோரும் தொகுதிகளை அதிமுக ஒதுக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில், திண்டுக்கல் மக்களவை தொகுதியை அதிமுக ஒதுக்கியது. பாமகவுக்கு அதிக பலமில்லாதது இந்த தொகுதி என்கிற தோற்றம் இருக்கிறது. திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றிய கிராமப் பகுதிகளில் கிறிஸ்தவ வன்னியர்கள், வன்னியர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். 2011 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியிலும் பாமகவுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. திண்டுக்கல் தொகுதியில் மறைந்த ஜே. பால் பாஸ்கர் போட்டியிட்டு 47,817 வாக்குகள் பெற்றார். 2019 லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் பாமக பெற்ற வாக்குகள் 2,07,551. இருந்தபோதும் வெற்றி வாய்ப்பு என்பது திண்டுக்கல் தொகுதியில் பாமகவுக்கு எட்டாக் கனிதான் என்பது யதார்த்தம். இதனால் திண்டுக்கல் போன்ற வெற்றி பெறுவோமா என்கிற சந்தேகத்துக்கு உரிய தொகுதிகளை பெறாமல் உறுதியான வெற்றி கிடைக்கும் என்கிற தொகுதிகளை தேர்வு செய்வதில், கேட்டு பெறுவதில் பாமக உஷாராக இருக்கிறது.
உஷார் பாமக
அந்த தொகுதியில், பாமக வேட்பாளர் கே.ஜோதிமுத்து 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பி.வேலுசாமியிடம் தோல்வி அடைந்தார். பாமகவுக்கு இது பெரும் தோல்வியாக அமைந்தது. இதனால், நடப்பு சட்டமன்ற தேர்தலில் இதுபோன்று எந்த தவறும் நடந்துவிடக் கூடாதென்று பாமக மிக உறுதியாக உள்ளது. தொகுதிகள் குறித்த கோரிக்கையை மிகத் தெளிவாக அதிமுக தலைமைக்கு பாமக தெரிவித்துவிட்டது. ஆகையால் தான் தொகுதிகள் இன்னும் இறுதி செய்யப்படாமல் இருப்பதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.