26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சென்னை: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. மும்பை தாக்குதல் நடந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்தத் கொடூர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலை நடத்திய சஜித் மிர் தலைமையிலான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையம், நாரிமன் ஹவுஸ் வணிக மற்றும் குடியிருப்பு வளாகம், காமா மருத்துவமனை, லியோபோல்ட் கஃபே, ஓபராய்-ட்ரைடென்ட் ஹோட்டல் மற்றும் தாஜ் ஹோட்டல் மற்றும் டவர் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியது.
ஆயுதப்படைகளின் நான்கு நாள் ஆபரேஷனில் ஒன்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தனியாக தப்பிய பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப் பிடிபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். நவம்பர் 11, 2012 அன்று புனேவில் உள்ள யெர்வாடா மத்திய சிறையில் கசாப் தூக்கிலிடப்பட்டார்.
நான் அதிபர்.. என்னிடம் ஒரு போதும் அப்படி பேச வேண்டாம்.. நிருபரிடம் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப்
இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்திய லஷ்கர் இ தொய்வா அமைப்பின் மூளையாக செயல்பட்ட சஜித் மிர் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். அவரை குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 37 கோடி ரூபாய் சன்மானம் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
நவம்பர் 26 மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் 12வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல நாடுகளிலும் அஞ்சலி கூட்டங்கள் நடைபெற்றன. மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்க கேபிடல் முன் ஒரு நினைவு கூட்டத்தை நடத்தினர்.
கூட்டத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் காலே பிரவுன்,
நீதிக்கான வெகுமதிகள் திட்டத்தின் மூலம், இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமான அனைவரும் தண்டனையை எதிர்கொள்வதை உறுதிசெய்ய நாங்கள் முயல்கிறோம் என்று கூறினார்.
26/11 மும்பை தாக்குதலின் 12வது ஆண்டு நினைவு நாளில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட உயிரிழந்தவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கும் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. எங்கள் இந்திய நண்பர்களுடன் இணைந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் பிரவுன் கூறினார்.
இந்த தாக்குதல்களுக்கு காரணமான நபர்களைப் பற்றிய தகவல்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை அமெரிக்க அரசு வெகுமதி அளிக்கிறது. இந்த கொடூரமான சதித்திட்டத்தின் முக்கிய உறுப்பினர்கள் பெருமளவில் உள்ளனர். மேலும் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த பயங்கரவாத செயலுக்கு மூளையாக செயல்பட்ட நபரைப் பற்றிய தகவல் கொடுக்கும் எந்தவொரு நபருக்கும் இந்த பரிசுத்தொகை கிடைக்கும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.