புதுப் பெண் சுனிதா மரணத்தில் திடீர் திருப்பம்.. அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட பயங்கரம்.. ஷாக்!
சென்னையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
சென்னை: தூக்கில் பிணமாக தொங்கிய புதுப்பெண் சுனிதா தலையில் ரத்த காயம் இருந்தது.. இதனால் அவரது சாவில் மர்மம் உள்ளதாக கோரி போலீஸில் புகார் செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. சுனிதாவை அடித்தே கொன்று இவர் தூக்கில் தொங்கவிட்டுள்ளதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் கண்டிகை கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் கார்த்திக்.. இவர் ஒரு விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுனிதா என்பவருக்கும் 7 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. சுனிதாவுக்கு 28 வயதாகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுனிதா வீட்டில் பிணமாக தொங்கினார்.. இதனால் கார்த்திக் குடும்பத்தினர், உடனடியாக சுனிதா வீட்டுக்கு போன் செய்து, சுனிதா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் சொன்னார்கள்.
இதை கேட்டு அதிர்ந்த பெற்றோர், கார்த்திக் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு சுனிதாவின் உடல் தூக்கு கயிறிலிருந்து இறக்கப்பட்டு, தரையில் கிடத்தப்பட்டிருந்தது.. அலறி அடித்து கொண்டு அழுத பெற்றோர், அப்போதுதான் மகளின் தலையில் ரத்த காயம் இருப்பதை கண்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், உடனடியாக பாதிரிவேடு ஸ்டேஷனில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் தந்தனர்.. இது வரதட்சணை பிரச்சனைக்காக ஏற்பட்ட கொலையாக இருக்கலாம் என்றும் கண்ணீருடன் தெரிவித்தனர். "
கல்யாணத்துக்கு தேவையான சீர்வரிசை பொருட்களை கொடுத்தேன்... ஆனால் ஒரு மாசத்திலேயே இன்னும் அதிகமாக வரதட்சணையை கார்த்திக் குடும்பத்தினர் கேட்டனர்.. அப்போதே எங்கள் வீட்டுக்கு மகளை அனுப்பி வைத்துவிட்டனர்.. நாங்கள்தான் சமாதானம் செய்து சுனிதாவை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.. அங்கு சென்றும் பிரச்சனை ஓயவில்லை.. வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்தி உள்ளனர்.
அதனால் கார்த்திக், அவரது குடும்பத்தினர்தான் சுனிதாவை அடித்து கொன்று உடலை தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என சந்தேகமாக உள்ளது.. அதனால் உரிய விசாரணை வேண்டும் என்று மனுவில் பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து போலீசார் சுனிதாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.. தொடர் விசாரணையும் நடந்தது.. சுனிதாவுக்கு கல்யாணமாகி 7 மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் உத்தரவிடப்பட்டிருந்தது... சுனிதாவுடையது கொலையா, தற்கொலையா என போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் உண்மை தெரியவரும் என்று சொல்லப்பட்ட நிலையில், அந்த ரிப்போர்ட்டும் வந்துள்ளது.
அதில், சுனிதாவின் மரணம் தற்கொலை இல்லை, கொலை என தெரியவந்துள்ளது... இதையடுத்து தலைமறைவாக இருந்த கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடி கைது செய்தனர்.. விசாரணையில், அடிக்கடி வரதட்சணை கேட்டு கார்த்திக் டார்ச்சர் செய்தது வந்ததும், சம்பவத்தன்று இரவு 11.30 மணிக்கு இதே பிரச்சனையை கார்த்திக் எழுப்பியதாகவும் தெரிகிறது.
தகராறு முற்றியதையடுத்து, ஆவேசம் அடைந்து கார்த்திக் சுனிதாவை சரமாரியாக தாக்கி உள்ளார்.. அடித்தே மனைவியை கொன்று, தூக்கிலும் தொங்க விட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்து வருகிறது.