அகிலா மேல கை வச்சா.. திரண்டு வந்த திருடர் குடும்பங்கள்.. ஆந்திராவில் சென்னை போலீஸ் அதிர்ச்சி!
சென்னையில் கைவரிசை காட்டிய ஆந்திர பெண் கைது செய்யப்பட்டார்
சென்னை: "அகிலா மேல கை வெச்சால், அவ்வளவுதான்.. அகிலாவை நாங்கள் கைது செய்ய விட மாட்டோம்" என்று திருட்டு பெண் ஒருவருக்கு ஒரு கிராமமே திரண்டு வந்து தமிழக போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ஜூலியா.. இவருக்கு 80 வயதாகிறது.. கடந்த 3ம் தேதி பெரம்பூர் சர்ச் அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அதே ஆட்டோவில் 3 பெண்களும் வந்தனர். ஜூலியாவிடம் பேச்சு தந்த அவர்கள், "உங்க கழுத்தில் செயின் அறுந்து விழறது போல இருக்கு.. பத்திரமா கழட்டி வெச்சுக்குங்க" என்று சொன்னார்கள்.
ஜூலியாவும் 3 சவரன் செயினை கழட்டி, தன் பைக்குள் வைத்து கொண்டார்.. வீட்டிற்கு வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது செயினை காணவில்லை என்று.. அதனால் போலீசில் இதை பற்றி புகார் செய்தார்.
குற்றவாளிகள்
போலீசாரும் செயினை திருடிய குற்றவாளிகளை தேடி வந்தனர்.. அப்போது சென்னையில் மேலும் சில இடங்களில் இதுபோலவே செயின் திருட்டு நடப்பது உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு தெரியவந்தது.. அதிலும் வளசரவாக்கம், வடபழனி, ஆவடி போன் இந்த பகுதிகளிலேயே செயின் திருட்டு புகார் நிறைய வருவதால், அந்தந்த பகுதி சிசிடிவி கேமிராக்களில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர். அப்போது, 3 பெண்கள் அந்த கேமிராவில் சிக்கினர்.
ஆந்திரா
20 - முதல் 30 வயது வரைதான் இருக்கும்.. அவர்களை தேடியபோது, ஆந்திராவில் தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு, போலீசார் சித்தூர் குப்பம் என்ற கிராமத்திற்கு சென்று அந்த பெண்களை தேடினர். அந்த கிராமத்துக்குள் போலீசார் நுழைந்ததுமே அதிர்ச்சி காத்திருந்தது.. அந்த கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலும் திருட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள்தானாம்.
திருட்டு கும்பல்
சொந்த மாநிலத்தில் கைவரிசையை காட்டினால் மாட்டி கொள்வோம் என்று வெளிமாநிலங்களுக்கு சென்று திருடிவிட்டு, திரும்பவும் கிராமத்துக்கே வந்து சொகுசாகவும், கெத்தாகவும் வாழ்பவர்களாம்.. இந்த கும்பலில்தான் சென்னையில் திருடிய 3 பெண்களில் ஒருவரான அகிலா என்ற பெண்ணை நம் போலீசார் பிடித்தனர்.
அனுப்ப மாட்டோம்
அகிலாவுக்கு 28 வயதாகிறது.. கனகா, அலமேலு என்ற 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.. இதையடுத்து அகிலாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வர போலீசார் முயனற்னர்.. ஆனால் அந்த ஊர் தலைவர் திடீரென வந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.. அகிலாவை நாங்கள் அனுப்ப மாட்டோம் என்று சொல்லவும், நம் போலீசார் அதிர்ந்தனர்.
விசாரணை
திருடிய பெண்ணுக்கு இவர் எதற்காக வந்து சப்போர்ட் செய்கிறார் என்பது புரியாமல், அங்கிருந்த லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். சம்பந்தப்பட்ட 3 பெண்களுமே இதே கிராமத்தை சேர்ந்தவர்கள்தானாம்.. கிட்டத்தட்ட 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அகிலாவை தமிழக போலீசாருடன் அனுப்ப சம்மதம் தந்தார்கள்.. இப்போது அகிலா புழலில் உள்ளார்.
விசாரணை
அகிலாவை தடுத்த அந்த ஊர் தலைவனும் ஒரு கொள்ளைக்காரன்தானாம்.. எந்த மாநிலத்தில் யார் திருடினாலும் சரி, இவருக்கு ஒரு பங்கு தந்துவிட வேண்டுமாம்.. திருடியவர்கள் யாராவது மாட்டிக் கொண்டால், இவர்தான் அவர்களை வந்து பெயிலில் எடுத்து வருபவராம்.. இந்த ஊர் தலைவனை பிடித்தால், பல கிரிமினல் சம்பவங்களுக்கு விடை கிடைக்கும் என்கிறார்கள்.