நீங்க போற ரோட்டுல திடீருன்னு ஒரு விமானம் வந்து தரையிறங்கினால்? பயப்படாதீங்க.. இனி இப்படித்தான்
Recommended Video
சென்னை: நீங்கள் பயணிக்கும் சாலையில் திடீரென ஒரு விமானம் பயங்கர சத்தத்தோடு வந்து இறங்கினால் பயப்படாதீர்கள். அது தேசிய அளவில் விமானம் தரையிறங்க தேர்ந்தெடுக்கப்பட்ட 29 நெடுஞ்சாலைகளில் ஒன்றாக இருக்கலாம்.
ஆம்.. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம்தான், இப்படியான ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அவசர காலங்களில் விமானத்தை தரையிறக்க வேண்டி வரும்போது, விமான நிலையங்களை தேடி அலைவது கஷ்டம் என்பதால் நெடுஞ்சாலைகளில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்து இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், தென் மாநிலங்களில், தமிழகமும், ஆந்திராவும் சேர்க்கப்பட்டுள்ளது.
29 இடங்கள்
இவை தவிர்த்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 29 சாலைகள் அவசர கால தரையிறக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளை இணைக்கும் சாலைகளில் விமான தரையிறக்கத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டமிடல் தேவை
"இது ஒரு சிறந்த யோசனையாகும். உலகின் பல பகுதிகளிலும் இதுபோல செய்யப்படுகிறது. ஆனால் இது மிகவும் சிக்கலான திட்டமாக இருக்கும். இது திட்டமிடல் மற்றும் கலந்தாய்வு மற்றும் மிக முக்கியமாக, நிதி ஒதுக்கீடு போன்ற விஷயங்களை உள்ளடக்கியது " என்கிறார் முன்னாள் ஏர் ஃசீப் மார்ஷல் ஃபாலி ஹோமி மேஜர்.
டெண்டர் பணிகள்
இந்திய விமானப்படையால் முன்மொழியப்பட்ட 29 திட்டங்களில், காஷ்மீரின் பிஜ்பேராவிலிருந்து சினர் பாக் வரை, மேற்கு வங்கத்தில் கோரக்பூர், ஒடிசாவில் உள்ள கியோஞ்சர் (97.51 கோடி ரூபாய் செலவில்) மற்றும் ஆந்திராவின் நெல்லூரிலிருந்து ஓங்கோல் (79.84 கோடி) ஆகிய சாலைகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
என்ன வசதி தேவை
எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் விமானத்தை தரையிறக்கிவிட முடியாது. எனவே விமானம் தரையிறங்க கூடிய சாலைகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட வேண்டியது அவசியம். 4 விமானங்களை ஒரே நேரத்தில் நிறுத்த பார்க்கிங் இடம், விமான டிராபிக் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் சாலையின் இருபுறங்களிலும் இரு தடுப்பு கேட்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். இவைதான் விமானம் தரையிறங்க தேவைப்படும் அடிப்படை விஷயங்கள்.
பிற நாடுகள்
ஜெர்மனி, சுவீடன், தென் கொரியா, தைவான், பின்லாந்து, சுவிச்சர்லாந்து, போலந்து, சிங்கப்பூர், செக்கோஸ்லோவாக்கியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அவற்றின் நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் அவசர காலங்களில் அல்லது போர் நேரங்களில் விமானங்களை தரையிறக்க வசதிகள் செய்துள்ளன.
பலன்கள் கிடைக்கும்
2015 ஆம் ஆண்டில், யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் முதல் தடவையாக இந்திய விமானப்படை அத்தகைய சோதனையை செய்தது. ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வேயிலும், இதுபோல சோதனை முதல் முறையாக 2016ல் செய்யப்பட்டது. அப்போது ஆறு போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டது. இதுபோன்ற செயல்பாடுகள் விமான பலத்தின் பயன்பாட்டில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன. மனித அவசர கால உதவி மற்றும் பேரழிவு நிவாரணத்திற்காக படைகள் விரைவாக சென்று சேர போக்குவரத்து விமானங்களையும் இதுபோன்ற சாலைகளில் பயன்படுத்த முடியும்.