சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்
Recommended Video
சென்னை: சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை பெய்தது. நீண்ட நேரம் நீடித்த இந்த மழையால் அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் தொடர் கனமழையால் அச்சம் அடைந்தனர்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கிய கடந்த 16ம்தேதியில் இருந்து தினமும் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய விடிய கனமழை பெய்தததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வாகனங்கள் முக்கிய சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு கடும் அவஸ்தைப்பட நேரிட்டது.
சாலைகளில் வெள்ளம்
இதேபோல் அலுவலகம் செல்வோரும் பல்வேறு முக்கிய சாலைகளில் நெரிசலில் திணறி போயினர். இது ஒரு புறம் எனில், பல இடங்களில் வெள்ளநீர் அடைத்துக்கொண்டதால் வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்தது. இதன் காரணமாகவும் மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகினர்.
100 மி.மீ மழை
இந்நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை தொடர் கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 102 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதேபோல் பெரம்பூரில் 117 மில்லிமீட்டரும், அயனாவரத்தில் 132 மில்லி மீட்டர் மழையும், மெரினாவில் 87 மில்லி மீட்டர் மழையும், கேகே நகரில் 67 மில்லி மீட்டர் மழையும் பெய்திருந்தது. இதேபோல் சென்னையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.
வெள்ளத்தில் சாலைகள்
இந்த மழையால் சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் சாலை, கோடம்பாக்கம் சாலை உள்ட பல்வேறு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் தத்தளித்தன. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இரவு முழுவதும் மழை பெய்த காரணத்தால் சென்னையில் தற்போது குளிர்ந்த காற்று வீசுகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
ஓரளவு வெயில்
சாலைகளில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி காணப்படுவதால் முக்கிய சாலைகளில் கவனமாக செல்வது நல்லது. இன்று ஓரளவு வெயில் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரளவு மழை நீர் வடிய வாய்ப்பு உள்ளது.