அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா பரிந்துரை
Recommended Video
சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடந்த போது 18 சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற்றது. இதன் பிறகு, மே 19ஆம் தேதி மேலும் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால் திமுக ஆட்சியை கைப்பற்றிவிடும். 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அதிமுகவும் .ஆட்சியை கைப்பற்றலாம் என உள்ளது.
இந்நிலையில் சபாநாயகர் தனபாலுடன் அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூவர் மற்றும் தமீமுன் அன்சாரிக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்புவது குறித்து விவாதித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் டிடிவி தினகனரனுக்கு ஆதரவாக செயல்படும் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோரை நீக்க அதிமுக கொறாடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார். இவர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகவும், கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகவும் புகைப்பட ஆதாரங்களுடன் சபாநாயகர் தனபாலிடம் பரிந்துரை செய்துள்ளார். இவர்கள் தகுதீ நீக்கம் செய்யப்பட்டால் அதிமுக 6 தொகுதிகளில் வென்றாலே ஆட்சியை தக்க வைக்க முடியும் என தெரிகிறது.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, ராஜேந்திரன், 3 எம்எல்ஏக்களுக்கு எதிரான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. புதிய ஆதாரங்கள் கிடைத்ததால் தகுதி நீக்க பரிந்துரை செய்துள்ளோம். கட்சிக்கு எதிராக 3 பேரும் செயல்பட்டார்கள் என்றார்.