3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாசிட்டிவ் - மருத்துவமனையில் சிகிச்சை
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க தயாராக இருந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அதிமுகவினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பரிசோதனை செய்யப்பட்டதில் 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டசபை செயலக ஊழியர் ஒருவருக்கும், முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபைக்கூட்டம் நாளை சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக இந்த கூட்டத்தொடர் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், தலைமை செயலக ஊழியர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால்தான் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் தனபால் கூறி இருந்தார்.
அதன்படி இரு தினங்களக்கு முன்பு முதல்வர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அவர்களது வீடுகளுக்கே சென்று சுகாதார ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர்.
கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு நேற்று காலை முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு கொரோனா இல்லை என்று சோதனை முடிவில் தெரியவந்தது.
கோவிட் 19 சுய உறுதி படிவம் என்றால் என்ன?.. நீட் மாணவர்களுக்கு கட்டாயம்!
அதேநேரம் திருச்செங்கோடு தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி மற்றும் செய்யாறு தொகுதி அதிமுக எம்எல்ஏ தூசி மோகன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இரண்டு அதிமுக எம்எல்ஏக்களும் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சண்முகநாதனுக்கும் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர், தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையில் உள்ள அவரது வீட்டில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளார். இந்த மூன்று அதிமுக எம்எல்ஏக்களுடன் கடந்த சில நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும், தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தலைமை செயலக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எடுத்த கொரோனா பரிசோதனை முடிவும் வெளியாகியுள்ளது. இதில் பத்திரிகையாளர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்று தெரியவந்தது. அதேநேரம், சட்டசபை செயலக ஊழியர் ஒருவருக்கும், முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால் இவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க தயாராக இருந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். மறைந்த ஜெ.அன்பழகனுக்கு நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.