அதிமுகவில் எல்லாம் சுபம்... உச்ச நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறும் எம்எல்ஏக்கள்
சென்னை: அதிமுகவில் எல்லாம் சுபமாக முடிந்துவிட்டதால், உச்ச நீதிமன்றத்தில் சபாநாயகர் நோட்டீஸ் தொடர்பான வழக்கை ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களும் திரும்ப பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி(அறந்தாங்கி), வி.டி.கலைச்செல்வன்(விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகியோர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரனுடன் தொடர்பில் உள்ளதாக கூறி,அவர்களை தகுதி நீக்கம் செய்து தொடர்பாக விளக்கம் கேடடு கடந்த மார்ச் மாதம் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தனித்தனியாக சபாநாயகர் தனபாலின் நோட்டீஸ்க்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன்படி உச்சநீதிமன்றம் சபாநாயகர் 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்போது இடைக்கால தடைவித்தது.
இதற்கிடையே லோக்சபா தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தநிலையில், அதிமுகவிலேயே தொடர மூன்று எம்எல்ஏக்களும் முடிவு செய்தனர். இதன்படி கலைச்செல்வன் எம்எல்ஏ, ரத்தினசபாபதி எம்எல்ஏ, பிரபு எம்எல்ஏ ஆகியோர் தனித்தனியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாயை சந்தித்து அவருக்குத்தான் தங்கள்து ஆதரவு என்று அறிவித்தனர்.
இதனால் அதிமுகவில் இப்போது எல்லாம் சுபமாக முடிந்துவிட்டது. இதனால் சபாநாயகர் நோட்டீஸ்க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு இனி முடிவுக்கு வருகிறது. இதன்படி வரும் ஜூலை 30ம் தேதி சபாநாயகர் நோட்டீஸ்க்கு எதிராக அவர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களும் வழக்கை திரும்பபெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.