வியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்
சென்னை: வியாசர்பாடியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஏழு மாதத்திற்கு பின்னர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 18 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை வியாசர்பாடி நியூ மெகிசின் புறம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (43). இவரது மனைவி அருணா தேவி (40) இருவரும் அவர்கள் வீட்டின் கீழ் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தனர். மளிகைக் கடைக்குள் பீரோவை வைத்து அதற்குள் பணம் மற்றும் நகைகளை வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவரது மளிகை கடை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர். இதுகுறித்து வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சிசிடிவி கேமரா
அந்த பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். நீண்ட நாட்களாகவே இழுபறியில் இருந்த இந்த வழக்கு சிசிடிவி பதிவுகள் மூலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
வியாசர்பாடி
எம்கேபி நகர் உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் வியாசர்பாடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி உள்ளிட்ட போலீசார் சென்னையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பல்வேறு நபர்களின் புகைப்படங்களை வைத்து பார்த்ததில் வடபழனியைச் சேர்ந்த பிரபா (21) என்பவருடைய புகைப்படம் ஒத்துப் போனது.
போலீஸார்
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் கோடம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (20) மற்றும் சாய் கிருஷ்ணன் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரபா மற்றும் சாய் கிருஷ்ணா இருவரும் புழல் சிறையில் இருந்த போது வியாசர்பாடியைச் சேர்ந்த இட்டா அஜித் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளை
அஜித் கொடுத்த தகவலின் பேரில் சிறையிலிருந்து வெளியே வந்ததும் மளிகைக் கடையை கொள்ளையடிப்பது என முடிவு செய்தனர். ஆனால் அஜித்க்கு ஜாமீன் கிடைக்காமல் பிரபா மற்றும் சாய்கிருஷ்ணனுக்கு மட்டும் ஜாமீன் கிடைத்துள்ளது. அஜித் வருவதற்குள் இவர்கள் இருவரும் ஆனந்தகுமார் என்பவனுடன் சேர்ந்து மூன்று பேரும் அந்த மளிகை கடையை கொள்ளையடித்துள்ளனர்.
சிறை
அஜித் கொடுத்த தகவலின் பேரில் இவர்கள் வியாசர்பாடி பகுதியில் கொள்ளையடித்துள்ளனர். இவர்கள் மூவரும் வடசென்னையைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதால் இவர்களை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களிடம் இருந்து 18 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வியாசர்பாடி போலீசார் சிறையில் அடைத்தனர்.