ஒரு கள்ளக்காதல்.. அதற்குள் ஒரு சந்தேகம்.. போலீஸ் வேடம் போட்டு கடத்தல்.. 2 பெண்கள் கைது!
போலி பெண் போலீஸாக நடித்த 2 பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னை: "என் கள்ளக்காதலனுக்கு, என்னை தவிர, சுபாஷினியுடனும் உறவு இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன்.. அதற்காக என் 2 தோழிகளை போலி போலீஸாக செட்அப் செய்து சுபாஷினியை கடத்த முயன்றேன்" என்று பெண் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த தம்பதி வெங்கடேஷ் - சுபாஷினி. மாம்பலம் ரெயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு பணியாளராக வேலை பார்த்து வரும் சுபாஷினிக்கு வயது 42.
சம்பவத்தன்று, வேலைக்கு செல்வதற்காக கிண்டி ரயில்வே ஸ்டேஷன் வந்தார் சுபாஷினி.. அப்போது பிளாட்பாரத்தில் 2 பெண்கள், ஒரு ஆண் திடீரென சுபாஷினி முன்பு வந்து நின்றனர், உங்களை இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர சொன்னார்" என்று சொல்லி சுபாஷினியை கடத்த முயன்றனர். இதில் 2 பெண்களில் ஒரு பெண் போலீஸ் உடை அணிந்திருந்தார்.
தன்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற இவர்கள் முயலவும், ஷாக் ஆன சுபாஷினி பக்கத்தில் இருந்த கிண்டி ரெயில்வே ஆபீசுக்குள் தப்பி ஓடினார். இதை பார்த்த மற்ற ரெயில்வே போலீசாரும், பயணிகளும் அந்த 3 பேரை பிடிக்க முயன்றனர். ஆனால், அதில் 2 பெண்களும் தப்பி சென்றுவிட்டனர், அந்த ஆண் மட்டும் சிக்கி கொண்டார்.
பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் ஒரு சாதாரண கார் டிரைவர்தான் என்றும், பாலகுரு, வதனீ என்ற பெண்தான் 2 பேரும்தான் இப்படி செய்ய சொன்னார்கள் என்று சொல்லவும் அவர்களிடம் விசாரணை ஆரம்பமானது.
விசாரணையில் வதனீ சொன்னதாவது: "எனக்கும், ராயபுரம் ரெயில்வே ஊழியரான கிஷோருக்கும் கள்ள உறவு இருந்தது. ஆனால், கிஷோருடன், சுபாஷினிக்கும் உறவு இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. அதனால், சுபாஷினியை கூப்பிட்டு மிரட்டினால், கிஷோருடன் பழக மாட்டார் என நினைத்தேன். அதற்காக என் தோழிகள் தமிழ்ச்செல்வி 38, முத்துலட்சுமி 37, ஆகிய 2 பேரையும் போலீஸ் போல் நடித்து சுபாஷினியை மிரட்ட பிளான் செய்தேன்.
இதற்காக முத்துலட்சுமிக்கு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்க, போலீஸ் உடைகளை வாங்கினோம். கடத்தி செல்ல கார் வேண்டும் என்பதால், ஜீவானந்தத்தை வரவழைத்தோம்" என்றார். இதையடுத்து வதனீ, முத்துலட்சுமி, தமிழ்ச்செல்வி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து போலீஸ் உடைகளையும் பறிமுதல் செய்ததுடன், கார் டிரைவர் ஜீவானந்தம், பாலகுரு ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது.