கையில் கத்தியுடன் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு மிரட்டல் விடுக்கும் 3 சிறுவர்கள்.. அதிர்ச்சி
சென்னை: கையில் கத்தியை வைத்துக் கொண்டு, குத்தி விடுவதாக மிரட்டுகிறது ஒரு சிறுவர் கூட்டம்.. அதுவும் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்குத்தான் இந்த பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு வீடியோ வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அந்த வீடியோவில் 3 சிறுவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு சிறுவன்தான் எகிறி எகிறி பேசுகிறான். இருப்பதிலேயே அந்த சிறுவனுக்குத்தான் வயது குறைவு. இன்னும் சொல்லப்போனால் வயசு 14க்கும் கீழேத்தான் இருக்கும்.
பக்கத்தில் இன்னொரு சிறுவன். வயது 17க்கு கீழே இருக்கும். கையில் கத்தியை வைத்துக் கொண்டு, ஆட்டியபடியே இருக்கிறான். சட்டை பட்டனை கழற்றிவிட்டு பின்னால் விட்டுள்ளான். தன்னை ஒரு ரவுடி என்றே அவன் மனதளவில் ஃபிக்ஸ் செய்து கொண்டது அந்த செயல்பாட்டில் எதிரொலிக்கிறது.
3 சிறுவர்கள்
இந்த 2 பேருக்கும் பின்னால் இன்னொரு சிறுவன். அவனுக்கும் 18 வயதுக்கு கீழே இருக்கும். நல்ல வளர்த்தி. அவன் அவ்வப்போது இவர்கள் செய்வதை பார்த்து சிரித்தபடியும், முறைத்தபடியும் பெர்பார்மன்ஸ் காட்டியபடி இருக்கிறான்.
அமைச்சருக்கு நேரடி மிரட்டல்
இதில் வீடியோவில் அதிகமாக பேசியுள்ள அந்த சிறுவன் அமைச்சர் செல்லூர் ராஜுவை பெயர் சொல்லியே மிரட்டுகிறான். தனது ஜாதியை பற்றி செல்லூர் ராஜு கேலி செய்து பேசியதாக அந்த சிறுவன் குற்றம்சாட்டுகிறான். இப்படி பேசக்கூடாது.. திமுகவை பற்றி பேசுங்கள், அதிமுகவை பற்றி பேசிக்கொள்ளுங்கள். எங்கள் ஜாதி பற்றி பேசக்கூடாது என அமைச்சரையே ஒருமையில் விளித்து, எச்சரிக்கிறான் அந்த சிறுவன்.
பள்ளி மாணவர்கள்
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில்தான் எனது சொந்த ஊர் என்றும் தில்லாக அட்ரஸ் கொடுக்கிறான் அந்த சிறுவன். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவருமே பள்ளி மாணவர்கள் என்று தெரிகிறது. அவர்கள் பேசக்கூடிய இடம் ஏதோ வீடு மாதிரித்தான் தெரிகிறது. வீட்டின் சமையலறையில் நின்றபடி அவர்களேத்தான் இந்த வீடியோவை ஷூட் செய்துள்ளனர்.
பயம் போச்சு
சிறுவர்கள் மத்தியிலும், ஜாதி வெறி எந்த அளவுக்கு அதிகரித்துக் கொண்டு செல்கிறது என்பதையும், காவல்துறை மீதான அச்சம் குறைந்து கொண்டு செல்கிறது என்பதையும் சமீபத்தில் பல சம்பவங்கள் நமக்கு காட்டுகிறது. இதுவும் அதேபோன்ற ஒரு சம்பவமாகத்தான் தெரிகிறது.