திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: திமுக- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன.
அதிமுகவில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜகவுடனான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அது போல் திமுகவும் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. நேற்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் அண்ணா அறிவாலயம் சென்றிருந்தார். அப்போது திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த தொகுதி நிலவரம் குறித்து இன்றைய தினம் உறுதி செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், எம்எல்ஏ அபுபக்கர் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களுடன் டிஆர் பாலு தலைமையிலான தேர்தல் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காதர் மொய்தீன் கூறுகையில் திமுக தலைமையில் 6 பேர் அடங்கிய குழுவை சந்தித்தோம்.
2 நாள் பேச்சுவார்த்தையில் எங்களுக்கு 5 தொகுதிகள் வழங்க கோரிக்கை வைத்தோம். கருணாநிதி காலத்திலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலில் கையெழுத்து போடுவது வழக்கம். அதே போல் இன்றைய தினத்தில் ஸ்டாலின் தலைமையில் முதல் கையெழுத்து ஒப்பந்தமானது.
நாங்கள் கேட்ட 5 தொகுதிகள் கொடுக்க இயலாது என எடுத்துரைத்தில் அவர்கள் கொடுத்த 3 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம். இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கிய ஒப்பந்ததிற்கு, ஸ்டாலின் முன்னிலையில் கையெப்பம் போடப்பட்டது.
3 தொகுதிகளில் போட்டி இட இருக்கிறோம். நாங்கள் போட்டியிடுவது எங்களுக்கு ஒதுக்கிய ஏணி சின்னத்தில் தான்.
ஏணி சின்னம் கேரளாவில் எங்களுக்கு ஒதுக்கிய சின்னம். இந்தியா முழுவதும் ஏணி சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றார்.