இடியும் மின்னலுமாய் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு திசையில் இருந்து பருவக்காற்று வீசுவதால் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
வானிலை மையம் கணித்தது போல நேற்று காலை நேரத்தில் சென்னை, காரைக்காலில் கனமழை பெய்தது. நேற்று மாலை நேரத்தில் திருப்பூர், தேனி, விருதுநகர், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்தது. விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல ஊர்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு எங்கெங்கு மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக
நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையிலும் புறநகரிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் தேனி, திருப்பூர்.திண்டுக்கல், கோவையிலும் மலைப்பகுதிகளிலும் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 72 மணிநேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
கடந்த 24 மணிநேரத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 17 செமீ மழையும் விருதுநகரில் 16 செமீ மழையும் பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 12 செமீ மழையும், மதுரை உசிலம்பட்டியில் 11 செமீ மழையும் பதிவாகியுள்ளது.