வெப்பத்தின் தாக்கம் நாளை முதல் அதிகரிக்கும்... வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க ஜூஸ், மோர் என குளிர்ச்சியான பொருட்களை நாடி வருகின்றனர்.
9 மணிக்கு மேல் நேரம் செல்ல, செல்ல வெப்பம் கொளுத்துகிறது. மதிய வேளைகளில் சாலைகளில் கானல் நீர் தெரியும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது.
நாளை முதல் வெயில்
இந்த நிலையில், வெயிலின் தாக்கம் நாளை முதல் அதிகரிக்கும் என்றும், வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, இரவு நேரம் கடும் புழுக்கமாக இருக்கும்.
வெயில் சுட்டெரிக்கும்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு குறைந்த அளவு வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு
வெப்ப சலனம் காரணமாக நாளை மறுநாள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்
கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, கத்திரி வெயில் போல், வெப்பத்தின் தாக்கம் சுட்டெரிக்கிறது. இதனால் மதிய வேளைகளில் சாலைகள் வெறிச் சோடி காணப்படுகிறது.
விற்பனை ஜோர்
இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் சதம் போடும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இப்போதே, சாலையோரம் தண்ணீர் பழம், இளநீர், பழச்சாறு, கூழ், மோர் என விற்பனை களைகட்டி உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் முகத்தை துணியால் மூடியவாறு செல்வதை காண முடிகிறது. பெரும்பாலானோர் கைகளில் குடைகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்கின்றனர்.