இப்போதே வெயில் தாங்க முடியல… இன்னும் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதாம்
சென்னை: உள்தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் உள்தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என தகவல் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் இன்னும் ஆரம்பிக்க ஒன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில், குறிப்பாக தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கம் என்பது சற்று அதிகமாக உள்ளது .
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 104.8 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. பல முக்கிய நகரங்களில் வெப்பம் சதம் போடுகிறது. வெளுத்து வாங்கி வரும் வெயிலால், மக்கள் உஷ்ண மூச்சு விட்டு வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் ஒருபுறமிருக்க மற்றொரு பக்கம் குடிநீர் தட்டுப்பாடும் தலைவிரித்து ஆட தொடங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் ஆழ்துளை கிணறு இன்னும் பல அடிகளுக்கு தோண்டப்பட்டு வருகிறது.
அதேநேரம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீர் மட்டமும் சரசரவென குறைந்து வருகிறது. இதனால் கோடை காலத்தை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் உக்கிரமாக இருக்கும் என்பதால், வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தால் மனதிற்கு இதமாகும் என்று மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.