கோவை -சேலம் -தருமபுரி.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்! ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு நாள் நெருங்கி வரும் நிலையில், கோவை, சேலம், தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களை நேரடியாக கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறாராம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த மூன்று மாவட்டங்களிலும் திமுக அடைந்த தோல்வியை இன்னுமே முதலமைச்சர் ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
கோவைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, சேலத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு, தருமபுரிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் செல்வாக்குள்ள தலைவர்களில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம்.. அமெரிக்க ஆய்வு அமைப்பு தகவல்!
நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு நாளையோ அல்லது நாளை மறுதினமோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தரப்பில் நேர்காணல் முடிக்கப்பட்டு வேட்பாளர் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கோவை, தருமபுரி, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களின் மீது ஒரு கண் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கட்சியினர் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறாராம்.
சட்டமன்றத் தேர்தல்
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவையிலும், தருமபுரியிலும் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சேலம் மாவட்டத்திலும் ஒரே ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளையும் அதிமுகவிடம் பறிகொடுத்தது. இந்த மூன்று மாவட்டங்களில் திமுக பலவீனமான நிலையில் இருப்பதை ஸ்டாலினால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். இதனால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் எப்படியோ, இந்த மூன்று மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பம்பரமாக சுழன்று
அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கே.என்நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் மூன்று மாவட்ட கள நிலவரங்கள் குறித்து அவ்வப்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆர்வமுடன் அழைத்துப்பேசி தெரிந்துக்கொள்வதால் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளதாம். சென்னை-திருச்சி-சேலம் என நேருவும், சென்னை-கரூர்-கோவை என செந்தில்பாலாஜியும், சென்னை-கடலூர்-தருமபுரி என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் பம்பரமாக சுழன்று வருவது குறிப்பிடத்தக்கது.
வித்தியாசமான மாவட்டங்கள்
தருமபுரியை பொறுத்தவரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு கணிசமான வாக்குவங்கி உள்ள மாவட்டமாகும். அங்கு சமுதாய ரீதியான உணர்வுகள் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் அதிமுக, பாமகவை காட்டிலும் திமுக கடுமையாக வேலைபார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கோவையை பொறுத்தவரை அதிமுகவுக்கு வாக்குவங்கி அதிகம் உள்ள மாவட்டமாகும். சேலம் அதிமுக-திமுக என இரண்டு கட்சிகளும் சரிசமமான ஓட்டு வங்கியை பெற்றிருக்கிறது.