இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி
Recommended Video
சென்னை: கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை இரவு சண்டை காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது.
இதற்கான செட் அமைக்கும் பணிகளில் சண்டைக் கலைஞர்கள், தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டிருந்தனர். இதில் கிரேன்களில் ஏறி மின்விளக்குகளை பொருத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது கிரேனில் இணைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி திடீரென அறுந்து சரிந்தது. இதில் கீழே நின்று கொண்டிருந்த உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த மது (வயது 29), சந்திரன் (வயது 60), உதவி இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தனர்.
அனைவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் இயக்குநர் ஷங்கருக்கும் கால்முறிவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் இது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.