சொந்த ரிஸ்க்கில் கூட்டிட்டு வாங்க - புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்து வர அரசு வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழகத்திற்கு மீண்டு வர விரும்பும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை: வெளி மாநில தொழிலாளர்களை கம்பெனி அல்லது மனிதவள ஏஜென்சியின் சொந்த செலவில் பஸ் அல்லது வேன் மூலம் அழைத்து வர வேண்டும் என்று தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர விரும்பும் நிறுவனம் அல்லது மனிதவள ஏஜென்சிகள், அந்த தொழிலாளர்களின் பெயர், வீட்டு முகவரி, ஆதார் எண், செல்போன் எண், பணியிடத்தின் முகவரி, வாகனத்தின் விவரங்கள், தனிமைப்படுத்தும் இடம் உள்ளிட்டவற்றுடன் மாவட்ட ஆட்சியர் மூலம் இ-பாஸ் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய உடன் கடந்த மார்ச் மாதம் இறுதியில் லாக்டவுன் அறிவித்தது மத்திய அரசு. வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊருக்கு சென்றனர். கால்நடையாகவும், ரயில் மூலமாகவும், சிலர் வேன், பஸ் மூலமாகவும் சென்றனர்.
சென்னையில் காலை முதலே வெளுத்து கட்டும் மழை... சாலைகளில் பெருகிய வெள்ளம்
தமிழகத்திற்கு திரும்ப விருப்பம்
தமிழ்நாட்டில் வேலை செய்து வந்த லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நான்கு மாதம் கடந்த நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் தமிழகத்திற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அரசு வெளியிட்ட அரசாணை
லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவு ஊழியர்களுடன் கம்பெனிகள் செயல்படத்தொடங்கியுள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.
திரும்ப வரும் தொழிலாளர்கள்
கொரோனா ஊரடங்குக்கு முன் தமிழகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் சேவை துறைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் சில லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் இவர்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர் திரும்பினர்.
மாநில அரசு நடவடிக்கை
மத்திய அரசு நாடு முழுவதும் தற்போது ஊரடங்கில் தளர்வு நடவடிக்கைகள் அறிவித்து வருவதால் தமிழகத்தில் தொழில்துறை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் உயிர்ப்பிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வழிகாட்டு நெறிமுறை என்ன?
இதற்கிடையே வெளிமாநில தொழிலாளர்களை அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மனிதவள ஏஜென்சிகளிடம் இருந்து அரசுக்கு ஏராளமான கோரிக்கைகள் வந்தன. எனவே வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவது தொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்து உள்ளது. அதன்படி வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுகிறது.
தொழிலாளர்களை கம்பெனி அல்லது மனிதவள ஏஜென்சியின் சொந்த செலவில் பஸ் அல்லது வேன் மூலம் அழைத்து வர வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர விரும்பும் நிறுவனம் அல்லது மனிதவள ஏஜென்சிகள், அந்த தொழிலாளர்களின் பெயர், வீட்டு முகவரி, ஆதார் எண், செல்போன் எண், பணியிடத்தின் முகவரி, வாகனத்தின் விவரங்கள், தனிமைப்படுத்தும் இடம் உள்ளிட்டவற்றுடன் மாவட்ட ஆட்சியர் மூலம் இ-பாஸ் பெற வேண்டும். இந்த விவரங்களை பரிசீலித்து மாவட்ட ஆட்சியர் ஆன்லைன் மூலம் அனுமதி வழங்க வேண்டும்.
தொழிலாளர்களை அழைத்து வாங்க
பஸ் அல்லது வாகனத்தில் ஏறும் முன் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெர்மல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்துக்குள் வந்ததும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கம்பெனி அல்லது ஏஜென்சியின் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் தொழிலாளர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.
தனிமை காலங்கள்
தொற்று இல்லாதவர்களை மாவட்ட நிர்வாகத்தால் ஒப்புதல் பெறப்பட்ட தகுந்த இடத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
இந்த தனிமைப்படுத்தப்பட்ட நாட்களிலும் யாருக்காவது கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களுக்கு நிச்சயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதார வழிமுறை
14 நாட்கள் தனிமை முடித்தபின் கொரோனா அறிகுறி இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தலாம். பணியிடத்தில் சோப் மூலம் கைகழுவுதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பணியிடத்தில் ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
தொழிலாளர்களுக்கு இட வசதி
தொழிலாளர்களுக்கு அவர்களது உடல்நலன் பற்றி அவர்களுக்கு தெரிந்த மொழியில் கம்பெனி அல்லது ஏஜென்சியால் அறிவுரை வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் தங்கும் இடத்தில் காற்றோட்ட வசதி, சுகாதாரம் பேணப்படவேண்டும். மேலும் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்து அடிக்கடி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.