தமிழ்நாடு.. இந்த 3 நகராட்சிகள் விரைவில் மாநகராட்சிகளாக மாறப்போகிறது.. அரசிடம் அதிரடி திட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 3 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1990களில் தமிழ்நாட்டில் மொத்தம் 6 மாநகராட்சிகள்தான் இருந்தன.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவைதான் அந்த 6 மாநகராட்சிகள். இதில் ஆறாவதாக தரம் உயர்த்தப்பட்டது திருநெல்வேலி. அதுவரை தமிழகத்தில் 5 மாநகராட்சிகள்தான் இருந்தன.
பூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்
15 மாநகராட்சிகள்
இதன்பிறகு, மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்பவும், சில நிர்வாக காரணங்களுக்காகவும், படிப்படியாக பல பெரிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் மற்றும் ஆவடி என தற்போது தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்தில் உள்ளது.
3 நகராட்சிகள்
இந்த நிலையில்தான் மேலும் 3 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளை , நகராட்சிகளாக, தரம் உயர்த்தும் முடிவை ஸ்டாலின் அரசு சமீபத்தில் எடுத்தது . இதன்மூலம், திருச்செந்தூர் உள்ளிட்ட பேரூராட்சிகள், நகராட்சிகளாக மாற்றப்படுகின்றன. இதே வரிசையில்தான் புதிதாக மூன்று மாநகராட்சிகள் உருவாக்கப்படுகின்றன.
3 மாநகராட்சிகள் எவை?
சென்னையை ஒட்டியுள்ள, தாம்பரம், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தற்போதைய நகராட்சிகளாக உள்ள இந்த மூன்று நகரங்களும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளன என்று தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று நகரங்களும் வட தமிழ்நாட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கதாக பார்க்கப்படுகிறது .
Recommended Video
ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நிலுவையில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல்களை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலை நடத்தி முடித்து விட்டு புதிதாக உருவாக்கப்படும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை இந்த வருடத்தின் இறுதிக்குள் நடத்தி முடிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
தேர்தல் கணக்கு
மாநகராட்சிகளாக வட தமிழகத்தின் மூன்று நகரங்கள் தரம் உயர்த்தப்படும். அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது திமுகவின் செல்வாக்கு அந்த பகுதிகளில் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் கணக்கும் போடப்படுகிறது. இதில் சில பகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சி கணிசமாக வாக்கு வங்கி இருக்கக்கூடிய பகுதிகள். எனவே அதை நோக்கி காய் நகர்த்தப் படுவதாக கூறுகிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.