சென்னையில் இருந்து திருவனந்தபுரம்...மங்களூரு...மைசூருக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
சென்னை: சென்னையில் இருந்து வரும் 27ஆம் தேதி முதல் கர்நாடகா, கேரளாவுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களாக ரயில் மற்றும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு இருந்தது. நடப்பு மாதத்தில் இருந்து சிறிது சிறிதாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கடந்த 7ஆம் தேதி முதல், தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சில ரயில்கள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. விரைவில் புறநகர் ரயில்களும் இயங்க இருக்கிறது.
இந்த நிலையில், வெளி மாநிலங்களுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 27 ஆம் தேதி முதல் சென்னை - திருவனந்தபுரம், சென்னை - மங்களூரு, சென்னை - மைசூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் தினசரி விரைவு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.