இன்னொருத்தனுக்கு பிறந்த குழந்தை.. எனக்கு பிடிக்கல.. எட்டி உதைத்து கொன்றேன்.. இளைஞர் வாக்குமூலம்
3 வயது குழந்தையை மிதித்து கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்
சென்னை: "இன்னொருத்தன் குழந்தை அது.. எங்களுக்குள் இடைஞ்சலாக இருந்தது.. ஆத்திரத்தில் மிதித்து, அடித்து கொன்றுவிட்டேன்" என்று பெண்ணை 2-வது திருமணம் செய்த இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கங்கா. கேரளாவை சேர்ந்த பெண்.. கட்டிட வேலை செய்பவர்.. 26 வயதான கங்கா கணவனை இழந்தவர்.. 3 வயதில் அருண் என்ற மகன் உள்ள நிலையில் வெங்கடேசனை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
கட்டிட வேலை செய்யும்போதுதான் கொத்தனார் வெங்கடேசன் பழக்கமானார்.. திருமணத்துக்கு பிறகு இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவசர வேலை காரணமாக, கங்கா கேரளாவுக்கு செல்ல நேர்ந்தது.. இதனால் மகனை வெங்கடேசனை பார்த்து கொள்ளும்படி சொல்லிவிட்டு கிளம்பி சென்றார். பின்னர், திடீரென குழந்தை அருண் கீழே விழுந்து அடிபட்டு விட்டதாக கங்காவுக்கு போன் பண்ணி சொன்னார் வெங்கசேடன். இதை கேட்டு அதிர்ந்த கங்கா, விரைந்து சென்னை வந்தார்.
படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள மகனை காண ஓடினார்.. ஆனால், அதற்குள் குழந்தை இறந்துவிட்டான்.. இதனால் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளான கங்கா, தனது குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக சொல்லி, வெங்கடேசன் மீது புகார் சொன்னார்.
இதையடுத்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். கள்ளக்குறிச்சியில் தலைமறைவாகி பதுங்கி இருந்த வெங்கடேசனை கைது செய்தனர். இது சம்பந்தமாக வெங்கடேசன் சொன்னதாவது:
"கங்காவின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை அருண்.. எனக்கு அவனை பிடிக்கவே இல்லை.. வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தை எங்களுடன் வளர்ந்து வருவது ரொம்பவும் தொந்தரவாக இருந்தது.. அதனால் அருண் மீது எனக்கு எப்பவுமே வெறுப்பு இருந்தது.
கங்கா ஊருக்கு போனபோது, நான் குடிபோதையில் வீட்டில் இருந்தேன். அப்போது திடீரென அருணை காணவில்லை.. தேடியபோது, பக்கத்து வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தான். பக்கத்தில் வீட்டில் சாப்பிட்டது எனக்கு பிடிக்கவில்லை.. அவனை அவனை இழுத்து கொண்டு வந்து சரமாரியாக அடித்தேன்.. அப்போதும், எனக்கு ஆத்திரம் தீரவில்லை.. அதனால் என் காலால் அருணை எட்டி எட்டி உதைத்தேன்.
இதில் கீழே விழுந்த அருணின் தலை, தரையில் வேகமாக மோதி ரத்தம் கொட்டியது.. மயங்கி விழுந்து விட்டான்.. இதனால் நான் அதிர்ச்சி அடைந்து எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அவனை சேர்த்தேன். ஆனால் டாக்டர்கள் என்னை கேள்வி மேல் கேள்வி கேட்கவும் பயந்துபோய் அங்கிருந்து நான் தப்பி ஓடிவிட்டேன்.. கங்காவுக்கு போன் செய்து விஷயத்தையும் சொல்லிவிட்டேன்" என்றார்.