ராணியின் சாபம்.. திடீரென இறந்த சதீஷ்.. ஆத்திரமடைந்த நண்பர்கள்.. வீடு துவம்சம்.. 3 பேர் கைது
பெண்ணின் வீட்டை அடித்து தாக்கிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
சென்னை அருகே இளைஞரின் திடீர் மரணத்திற்கு எதிர்வீட்டு பெண் கொடுத்த சாபமே காரணம் என்று கூறி இறந்த இளைஞரின் நண்பர்கள் பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கினர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராணி என்பவர் தனது வீட்டு வாசலில் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். இந்தக் கடை வைப்பதற்கு ஆரம்பம் முதலே இளையகணேசன் என்பவர் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் ராணியால் தொடர்ந்து டிபன் கடையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு இளையகணேசன் குடும்பத்தினரே காரணம் என்று கருதிய அவர், இளையகணேசன் குடும்பத்தினர் அழிந்து போகட்டும் என்று சாபம் விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளையகணேசனின் மகன் சதீஷ் என்பவர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ராணியின் சாபத்தால்தான் சதீஷ் உயிரிழந்ததாகக் கருதிய சதீஷின் நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் ராணியின் வீட்டை அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தாக்குதல் தொடர்பாக புளியந்தோப்பு போகிபாளையத்தை சேர்ந்த டேவிட் என்ற ராஜா, ஜவகர் மற்றும் 17 வயது சிறுவனைக் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.