மினி சரக்கு லாரியில் இருந்த 300 கிலோ குட்கா பறிமுதல்.. சென்னை திருவொற்றியூரில் பரபரப்பு
சென்னை: சென்னை திருவொற்றியூரில் 300 கிலோ குட்கா மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சாலையோரமாக சந்தேகத்திற்கிடமான வகையில் மினி சரக்கு லாரி ஒன்று நீண்ட நேரமக நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து மினி சரக்கு லாரியை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
சோதனையில் 8 மூட்டைகளில் சுமார் 300 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து குட்கா மூட்டைகளை போலீஸார் கைப்பற்றினர். குட்கா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மினி சரக்கு லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் குட்கா மூட்டைகள் மற்றும் சரக்கு வாகனம் யாருக்கு சொந்தமானது என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் குட்கா புகையிலை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்றும் விசாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் குட்காவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மூட்டை மூட்டையாக அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது