கனமழையால் நிரம்பிய ஏரிகள் - செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்கனமழை பெய்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இரண்டு நாட்கள் இடைவிடாமல் பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மழை வெள்ள நீர் சூழ்ந்தது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
ஏற்கனவே கடந்த மாதம் நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்றும் கனமழை கொட்டியதால் இந்த 2 ஏரிகளுக்கும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க தொடங்கியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6,200 கன அடி வரை தண்ணீர் வந்தது. இதனையடுத்து ஏரிகளில் இருந்து 3000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை குறைந்ததால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏரிக்குவரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கன அடி. தற்போது 3426 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மொத்தம் உள்ள 24 அடியில் 23.18 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. இதேபோல் புழல் ஏரியில் இருந்து ஆரம்பத்தில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் 1500 கன அடி வரை உயர்த்தப்பட்டது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கன அடி ஏரியில் 881 மி.கன அடி தண்ணீர் உள்ளது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 406 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 75 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.