லோன் ஆப்.. மூளையாக செயல்பட்ட சீனக்காரர்.. வாங்கிய கடனுக்கு 36 சதவீதம் வட்டி.. அதிர வைக்கும் தகவல்கள்
சென்னை: லோன் ஆப் மூலம் கடன் கொடுத்தவர்களிடம் 36 சதவீதம் வட்டியாக வசூலித்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
லோன் ஆப்கள் மூலம் கடன் கொடுத்து வட்டிக்கு வட்டி என வசூலித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புகாரின் பேரில் மிரட்டல் விடுக்கும் எண்ணை சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் புலனாய்வு செய்தனர்.
அதில் புகார்தாரருக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் பெங்களூருவில் ட்ரூ கிண்டில் டெக்னாலஜி பிரைவேட் நிறுவனம்' என்ற பெயரில் இயங்கி வரும் கால்சென்டரில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அந்த கால்சென்டரில் அதிரடியாக சோதனை நடத்தினார்.
பெங்களூர்
அப்போது அங்கு 110 பேர் பணி புரிவதும், பெங்களூரு சவுத் இந்திரா நகர் துப்பனஹல்லி பகுதியை சேர்ந்த பிரமோதா (28) , தும்கூர் மாவட்டம் சிரா தாலுக்கா, சிக்கனஹல்லி பகுதியை சேர்ந்த சி.ஆர்.பவான் (27) ஆகிய 2 பேர் இந்த கால்சென்டரை நிர்வகித்து வருவதும் தெரிய வந்தது. இவர்கள் கடன் செயலிகள் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கடன் அளித்தது தெரியவந்தது.
பறிமுதல்
கடன் செலுத்தாவிட்டால் இந்த கால்சென்டர் ஊழியர்கள் மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து இவர்களை கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி கைது செய்து 21 லேப்டாப்கள், 20 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
லேப்டாப்கள் பறிமுதல் q
அதில் இவர்களை வழிநடத்தியது சீன நாட்டை சேர்ந்த சியாவ் யங்மாவ், ஊ யுமேன் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலம் ஹரலூரில் தங்கியிருப்பதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்தும் 2 லேப்டாப்கள், 6 செல்போன்கள், பாஸ்போர்ட், ஏடிஎம் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய குற்றவாளி
இவர்கள் 4 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் முக்கிய குற்றவாளி சீனாவில் இருப்பது தெரியவந்தது. சீனாவில் வசிக்கும் ஹங்க் என்பவர்தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டார். இவரது உத்தரவின் படி பிரமோதா, பவான் ஆகியோர் உத்தரவுகளை வழங்குவார்கள். தினமும் 10 பேருக்கு கடன் அளிக்க வேண்டும். இந்த இலக்கை அடையாதவர்கள் வார இறுதியில் பணிநீக்கம் செய்யப்படுவர்.
இரு வங்கிக் கணக்குகள்
வேலையை தக்க வைத்து கொள்ளவே பலர் ஆசைவார்த்தைகளை கூறி ஏழை, நடுத்தர வர்க்கத்தினரை இழுப்பார்கள். இந்த செயலிகளை நூத்தம் ராம் வடிவமைத்தார். இந்த வழக்கில் கைதான 4 பேரும் இரு வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் ஒரு வங்கிக் கணக்கில் ரூ 1.98 கோடியும். மற்றொரு கணக்கில் ரூ 48 லட்சமும் இருந்தது. இதையடுத்து இரண்டையும் போலீஸார் முடக்கினர்.
காலாவதியான விசா
இந்த சீனர்கள் இருவரின் விசா காலாவதியானதும் தெரியவந்தது. கொடுக்கும் கடனுக்கு 36 சதவீதம் வட்டியை வசூலித்தனர். சீனாவில் உள்ள ஹங்கை பிடிக்க போலீஸார் முயற்சிக்கிறார்கள். அது போல் இவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.