திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்?
சென்னை: அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு போக விரும்பாத கட்சிகள் கமல்ஹாசன் தலைமையில் 3-ஆவது அணி அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தலுக்கான அறிவிப்பு வரவுள்ளது. இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதில் அதிமுக கூட்டணி பேச்சு முடிந்துவிட்டது.
எத்தனை இடம்
அதிமுகவுடன் பாஜக, பாமக இணைந்து தேர்தலை சந்திக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் எழுந்துள்ளன. அதுபோல் புதிய நீதி கட்சிக்கும், இந்திய ஜனநாயக கட்சிக்கும் அதிமுக கூட்டணியில் தலா ஓர் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.
எதிர்ப்பு
இந்த நிலையில் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையானது இழுபறியில் உள்ளது. இதில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு அதிமுகவின் தோழமை கட்சிகளான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கட்சி துவக்கம்
அது போல் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு பாமகவிலிருந்து சிலர் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக, திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்லும் கட்சிகளும் உள்ளன. இன்று முதலாமாண்டு கட்சி துவக்க விழாவை கொண்டாடினார் கமல்ஹாசன்.
3-ஆவது அணி
அப்போது அவர் கூறுகையில் 3-ஆவது அணி நிச்சயம் அமையும் என கூறியுள்ளார். கமல் கூறிவரும் விஷயங்கள் மற்ற அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபடுகிறது. கிராம சபை கூட்டம், மக்களிடம் குறை கேட்பு கூட்டம் உள்ளிட்டவற்றை கமல் நடத்தி முடித்தார். விஜயகாந்த் போல் கமல்ஹாசனும் நிச்சயம் கணிசமான வாக்குகளை பெறுவார் என்ற நம்பிக்கை அவர் செல்லும் இடங்களில் கூடும் கூட்டங்களை பார்த்தாலே தெரிகிறது.
தேசிய அளவில் 3-ஆவது அணி
எனவே கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கமல்ஹாசன் தலைமையில் 3-ஆவது அணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேசிய அளவில் 3-ஆவது அணியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.