570 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்.. இவர்களில் எத்தனை பேர் எம்பியாகப் போறாங்களோ!
சென்னை: மக்களவைக்கான மூன்றம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 570 பேர் கிரிமினல் பின்னணியை கொண்டவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் இம்மாதம் 23 ம் தேதி கேரளா, கர்நாடகா உட்பட மொத்தம் 115 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இந்த 115 தொகுதிகளில் 1612 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதில் 570 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தேர்தல்கள் குறித்து அசோசியேஷன் ஒப் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் என்ற அமைப்பு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த ஆண்டு நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் குறித்து ஆய்வு செய்த இந்த அமைப்பு இன்று ஒரு புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 90 வேட்பாளர்களில் 40 பேர் கிரிமினல் பின்னணியை கொண்டவர்கள் என்றும் பாஜகவில் 97 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததில் 38 பேர் கிரிமினல் பின்னணியை கொண்டவர்கள் என்பதுவும் தெரிய வந்துள்ளது.
கிரிமினல் வழக்குகள்
இவர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதில் 14 வேட்பாளர்கள் நீதிமன்றத்தால் தண்டனைக்கு உள்ளானவர்கள். 13 வேட்பாளர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. அதோடு பாலியல் பலாத்காரம், பெண்களின் நடத்தையில் சந்தேகப்பட்டு நடத்தப் பட்ட தாக்குதல்கள் இது போன்ற குற்றசாட்டுகள் இந்த வேட்பாளர்களின் மீது உள்ளன .
வன்கொடுமை வழக்குகள்
ஒரு பெண்ணின் கணவனாக அல்லது கணவனுக்கு உடந்தையாக ஒரு பெண்ணை வன்கொடுமை செய்தல் என்ற வகையில் மட்டும் 26 வேட்பாளர்கள் மீது வழக்குகள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் 26 வேட்பாளர்கள் மீது அவதூறாக பேசுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
63 ரெட் அலர்ட் தொகுதிகள்
வேட்பாளர்கள் மீதான வழக்குகள் இவ்வாறு நீண்டு கொண்டே போக ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் மூன்று அல்லது நான்கு வேட்பாளர்கள் குற்றப் பின்னணியை கொண்டவர்கள் என்றால் அந்த தொகுதி ரெட் அலர்ட் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்க்கும்போது அதிகப்படியான குற்றவழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடும் ரெட் அலர்ட் தொகுதிகளாக 63 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
392 கோடீஸ்வரர்கள்
இப்படி வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை புட்டு புட்டு வைக்கும் இந்த ஆய்வறிக்கை வேட்பாளர்களின் சொத்து மதிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி 1612 வேட்பாளர்களில் 392 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்று தெரிகிறது. மூன்றாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.95 கோடிகள். இப்படியாக இவர்களின் சொத்து மதிப்பு தேர்தல் விதிமுறைகளை தாண்டியே உள்ளது.
இவர்கள்தான் ஆளப் போகிறார்கள்
தேர்தல் விதிமுறைகளின்படி ஒரு கோடிக்கும் அதிகமாகவே இவர்களின் சொத்து மதிப்பு உள்ளது என்பது கவனிக்கத் தக்கது. இப்படியான கோடீஸ்வர குற்றப் பின்னணி கொண்டவர்கள்தான் நமது மக்கள் பிரதிநிதியாக் வந்து நம்மை ஆளப் போகின்றனர்.