திமுக, அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த 4,000 பேர்.. எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சி
சென்னை: சென்னையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: தாய்க் கழகத்திற்கு வருகை தந்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த வரவேற்பு தெரிவிக்கிறேன். எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கியபோது, எதிரிகளால் எத்தனையோ சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவுக்குப் பிறகு கழகம் இரண்டாக பிளவுபட்டது. பிரிந்த கழகத்தை ஒன்றாக இணைத்து வரலாறு படைத்தவர் ஜெயலலிதா.
6 முறை தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்து, யாரும் மறக்க முடியாத பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. அவர் கண்ட கனவை, நனவாக்கும் விதமாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து விலகி, நமது இயக்கத்தில் இணைந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டசபை நிகழ்ச்சியில், ஜெயலலிதா பங்கேற்றபோது ஒரு கருத்தைச் சொன்னார். எனக்குப் பின்னாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 100 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என்ற லட்சிய வார்த்தையை குறிப்பிட்டார்.
காஷ்மீருக்காக எதையும் செய்வோம்.. அணு ஆயுத போர் நடந்தால் உலகுக்கே பாதிப்பு.. இம்ரான் கான் திடீர் உரை
அந்த லட்சிய வார்த்தைக்கு உரமிடும் விதமாக, எவ்வளவோ சோதனைக்கு நடுவேயும் கழகம் பீடுநடை போட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த கழகத்தைக் கட்டிக் காப்பாற்ற வந்துள்ள அனைத்து சிங்க குட்டிகளும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அத்தனை பேரும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு, கழகம் வலிமையோடு எதிரிகளை வீழ்த்தும் அளவுக்கு உங்களுடைய பணி அமைய வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.