தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியல்
தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் புகாருக்கு உள்ளான சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய ராஜேஷ் தாஸை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு டிஜிபி பதவியும் பழையபடி ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு எனத் தரமிறக்கம் செய்யப்பட்டது. அவருக்கு பதிலாக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி டாக்டர் கே. ஜெயந்த் முரளி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் டிஜிபியாகப் பதவி உயர்த்தப்பட்டு சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இது நிலை உயர்த்தப்பட்ட பதவி ஆகும்.
முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பும் வழியில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்திருக்கிறார்.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி. அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாலியல் தொந்தரவு என்றால்? கனிமொழி எம்பி ட்விட்டரில் சரமாரி கேள்வி
இந்த நிலையில் ராஜேஷ் தாஸை கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு டிஜிபி பதவியும் பழையபடி ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு எனத் தரமிறக்கம் செய்யப்பட்டது. அவருக்கு பதிலாக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி டாக்டர் கே. ஜெயந்த் முரளி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபி கரண் சின்கா ஐபிஎஸ் அமலாக்கத்துறை சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல அமலாக்கத்துறை சிறப்பு டிஜிபியாக இருந்த ஷகில் அக்தர் ஐபிஎஸ் காவலர் பயிற்சி கல்லூரி சிறப்பு டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்.பி கயல்விழி, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.