கன்னித்தீவு கதை போல் நீளும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு... தொடரும் கைதுகள்
சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ஏ-தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் என இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தேர்வு முறைகேட்டில் சிக்குவார்கள் என்பதால் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் 50 இடங்களுக்குள் தேர்ச்சியான நபர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தீபக், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த விநோத்குமார், கூடங்குளத்தை சேர்ந்த தேவி மற்றும் அருண் பாலாஜி ஆகிய நான்கு பேரிடமும் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது. அப்போது பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டதில் அவர்கள் நால்வரும் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. குரூப் 2 ஏ-தேர்வில் தீபக் 39-வது இடத்தையும், விநோத்குமார் 27-வது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமைச்செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளராக தீபக் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதேபோல் விநோத் குமார் வேலூர் மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். தேவி நாகர்கோவிலில் அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் அனைவரும் இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை கொடுத்து தேர்வில் வெற்றிபெற்றவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
கன்னித்தீவு கதை போல் நீண்டுகொண்டே போகும் இந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ஏ-தேர்வு முறைகேட்டில் இன்னும் பலர் சிக்கக்கூடும் எனத் தெரிகிறது. டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டங்கள், அறிக்கைகள் என இறங்கிவிட்டதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குரூப் 4-ஐ தொடர்ந்து குரூப் 2-விலும் மோசடி அரங்கேறியிருப்பது உண்மையாக படித்து தேர்வை சந்தித்தவர்களுக்கு பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.