கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதா; சட்டத்தை மீறுவது ஏன்: கனிமொழி கேள்வி!
சென்னை: கழிவுநீர் தொட்டிகளில் கழிவுகளை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற சட்டத்தை மீறி செயல்படுவதால்தான் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது என்று தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டு இருக்கும் தகவலில், ''தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். கழிவுகளை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற சட்டத்தை மீறி செயல்படுவதால்தான், இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்திலும், நாம் இன்னும் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நிலையை மாற்ற வேண்டும். கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த கனிமொழி தற்போது கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.
நாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு 1993ல் தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தில் 2013ல் திருத்தமும் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், இன்னும் நாட்டில் ஆங்காங்கே மனிதர்களை பயன்படுத்துவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
Revathy: கொதித்தெழுந்த 3 பெண்கள்.. கனிமொழி - ரேவதி - சுசித்ரா.. முதல்வெற்றி.. என்னவென்று பாராட்டுவது
துப்புரவு தொழிளார்களுக்கு என்று தேசிய ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம், 2017ல் ஒரு ஆய்வை வெளியிட்டு இருந்தது. அந்த ஆய்வின்படி, சராசரி, ஐந்து நாட்களுக்கு ஒருமுறை கழிவுநீர் தொட்டியில் இறங்கும் தொழிலாளிகளில் ஒருவர் உயிரிழக்கிறார் என்ற புள்ளி விவரத்தை பதிவிட்டு இருந்தது. ஆனாலும், இன்னும் துயரம் துடைக்கப்படவில்லை. டிஜிட்டல் இந்தியா பற்றி பேசும் நாம் இன்னும் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில்தான் இருக்கிறோம் என்பது அவமானத்துக்குரியது.