களை கட்டிய சட்டசபை தேர்தல் ஏற்பாடு.. தமிழகம் வருகிறது 45 கம்பெனி மத்திய ஆயுதப்படை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களை கட்ட தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி 25ம் தேதி, மத்திய ஆயுதப்படையின் 45 கம்பெனி போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வர உள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது என்பது பற்றிய அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் இந்த மாத இறுதியில் அறிவிக்கும் என்று தெரிகிறது. ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இப்போதே தேர்தலுக்கான ஆயத்த பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக பாதுகாப்பு பணிக்கு முதல் கட்டமாக 45 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை போலீசார் வர உள்ளனர்.
ஒரு கம்பெனியில் 100 முதல் 120 வீரர்கள் இருப்பார்கள். 45 கம்பெனி என்று சொன்னால், சுமார் 5000 பாதுகாப்பு படை வீரர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புக்காக நிலை நிறுத்தப்படுகிறார்கள்.
சாலை நெடுக ஜல்லி கற்கள்.. சறுக்கி விழுந்த டூ-வீலர்கள்.. கால் கடுக்க அள்ளிய போலீஸ்
பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11 ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் தமிழகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வருகை தந்தனர். அப்போது, தமிழகத்தில் எந்த மாதிரி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையின் அடுத்த கட்டமாக பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
வாக்குச் சாவடி மையங்களை கண்காணிப்பது, வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுப்பதை தடுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது