தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா... 477 பேருக்கு தொற்று உறுதி... ஐந்து பேர் பலி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மட்டும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர்.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மிகத் தீவிரமாகப் பரவிவந்த கொரோனா, கடந்த சில மாதங்களாகவே குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 47ஆவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 4,285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று 477 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 8,44,650 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனாவுக்கு மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
ஒரு காலத்தில் கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சென்னையில் 91வது நாளாக இன்றும் 500-க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இன்று சென்னையில் 149 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் இருந்து 482 தொற்றிலிருந்து குணமடைந்தனர். அதேபோல இன்று மட்டும் தமிழகத்தில் 53,873 பேருக்குச் சோதனை செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் இதுவரை 1,63,95,635 பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளன.