தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் .. சென்னையில் 5,720 வாக்கு சாவடிகள் அமைப்பு
சென்னை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்காக சென்னை மாநராட்சியில் 5,720 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் என்பதை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். அப்படி நடத்தப்பட்டால் தான் மத்திய அரசின் நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வந்து சேரும். ஆனால் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுக்களுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
கடைசியாக தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் 2016-ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டு அடிப்படையில் வார்டுகள் முறையாக ஒதுக்கவில்லை என புகார் கூறி, திமுக சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் கன மழை.. எங்கெல்லாம் பெய்யும்? சென்னை வானிலை மையம் அறிவிப்பு
இதனையடுத்து இடஒதுக்கீடு முறையை சரி செய்த மாநில தேர்தல் ஆணையம், பின்னர் வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டும், ஆண், பெண் வார்டுகளை கண்டறிந்து பிரிக்க வேண்டும் என தொடர்ச்சியாக காரணங்களை கூறி உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தது.
இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கில் நடப்பாண்டு ஆகஸ்ட் இறுதியில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இருப்பதாக, மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகள் வரையறை செய்யும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்பட்டு பட்டியல் தயாராகி வருகிறது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரான பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் மொத்தம், 5,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இது தொடர்பான வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் உள்ளாட்சி தேர்தலின் போது ஆண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அனைத்து வாக்காளர்களுக்காகவும் 5,564 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
வரும் திங்கட்கிழமையன்று பொதுமக்கள் பார்வைக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையர் அலுவலகம், மண்டல அலுவலகங்கள், அனைத்து வார்டு அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிக்கையின் மூலம் கூறியுள்ளார்.