தமிழகத்தில் மேலும் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு; 119 பேர் மரணம்- 5,146 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழகத்தில் மேலும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் ஒரே நாளில் மொத்தம் 5,146 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடம்தான். அந்த அளவுக்கு தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்.
18 முதல் 60 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும் எங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தலாம்.. ரஷ்யா நிபந்தனை
மேலும் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல் 119 பேர் ஒரே நாளில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனா டிஸ்சார்ஜ், மரணங்கள்
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,397 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 5,146 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையும் 2,61,459 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 980 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் சென்னையில் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பு இருந்த நிலை மாறி இருக்கிறது. சென்னையில் இன்று மட்டும் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதேநேரத்தில் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாகவும் உள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், தேனிமாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில்தான் டிஸ்சார்ஜ் அதிகம்
டிஸ்சார்ஜ் எண்ணிக்கையிலும் சென்னைதான் அதிகம். இன்று மட்டும் சென்னையில் 1070 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கொரோனா டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது.
சென்னையில் 18 பேர் பலி
சென்னையில்தான் இன்று அதிக அளவில் கொரோனா மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சென்னையில் ஒரே நாளில் 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவை, தூத்துக்குடியில் தலா 7 பேர் என மொத்தம் 14 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.