"குடியை விடு.. படிக்க விடு".. முதல்வர் இல்லம் நோக்கி 5 சிறுவர்கள் 30 கி.மீ. நடந்தே சென்று போராட்டம்
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 5 சிறுவர்கள் முதல்வர் இல்லம் நோக்கி 30 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
Recommended Video
நாட்டில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து, டாஸ்மாக் உள்ளிட்ட அரசுக்கு வருவாய் தரும் அனைத்து துறைகளும் மூடியே உள்ளது. இதனால் மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்த நிலையில் பொருளாதாரத்தை சீர்கேட்டை சமாளிக்க மாநிலங்கள் சில தளர்வுகளை ஏற்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு அதிக வருவாயை கொடுக்கும் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் பணம் செலுத்தினால் 2 மது பாட்டில் தரலாம்.. நிபந்தனையுடன் டாஸ்மாக் திறக்க ஹைகோர்ட் அனுமதி
டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு
சமூக வலைதளங்களிலும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க எதிர்ப்பு எழுந்துள்ளது. 45 நாட்களுக்கு குடிக்காமல் இருந்ததால் வீடுகளில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருந்தது, குற்றங்கள் குறைந்தன. இதனால் மதுப்பிரியர்களின் பிள்ளைகளும் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
அரசு முனைப்பு
மேலும் கூலித் தொழில் செய்வோரின் குழந்தைகளுக்கு உணவில்லாததற்கு வருந்துவதை காட்டிலும் தங்கள் தந்தைமார்கள் குடிக்காமல் இருப்பதை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் சென்னையை தவிர தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.
நடைப்பயணம்
தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கை விடுத்து ஆகாஷ், விஷ்டோரியா, ஆதர்ஷ், சபரி, சுப்ரியா ஆகிய 5 சிறுவர்கள் முதல்வர் இல்லம் நோக்கி நடந்து செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கேளம்பாக்கத்தை அடுத்துள்ள படூரில் இருந்து 30 கி.மீ. தூரம் வரை நடந்தே இந்த சிறுவர்கள் நடைப்பயண போராட்டத்தை தொடங்கினர்.
படிக்க விடு
அவர்கள் கையில் "குடியை விடு படிக்க விடு" என்ற பதாகைகளை ஏந்தி இருந்தனர். இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது போல் முன்பும் மதுக்கடைகளை மூட வேண்டும் என குழந்தைகள் போராட்டம் நடத்திய சம்பவங்களும் நம் தமிழகத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.