"தமிழில் 5 மருத்துவ பாடப் புத்தகங்கள்" சர்வதேச புத்தக கண்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு!
சென்னை: சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 5 மருத்துவப் பாடப் புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கடந்த 16ஆம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதன் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிறைவு விழாவில், தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் இடையே புத்தகங்களின் பதிப்புரிமை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 5 மருத்துவ பாடப் புத்தகங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
முதலுக்கே மோசமாயிடும்..தமாகாவை தள்ளிவிடும் இபிஎஸ்? எப்படியும் அதுதான் நடக்கும்! ’பிளான் பி’ இதுதானா?
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு தமிழில் பாடப் புத்தகங்கள் வெளியிடப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னையில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாட்டில் தமிழாட்சி நடக்கும் போது இதுபோன்ற பன்னாட்டு புத்தக காட்சிகள் நடப்பது வியப்பல்ல. மகாகவியின் கனவை நிறைவேற்றும் வகையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
உலக இலக்கியங்கள்
உலகம் முழுவதும் உள்ள சிறந்த அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்புகளை தமிழில் கொண்டு வர வேண்டும். இலக்கிய செழுமை மிக்க தமிழ் படைப்புகளை உலகமெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காக தான் சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் உலகளாவிய இலக்கியங்களாக மாற வேண்டுமானால், உலக மொழிகளில் நமது இலக்கியம் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகை
பெரியாரின் சிந்தனைகள் 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. படைப்பிலக்கியத்துக்கு இணையான மதிப்பு மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கும் உள்ளது. இந்த சூழலில், அறிவு உலகத்திலும் உலகளவில் தமிழ்நாடு தனது சிறகை விரித்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து, மொழிபெயர்ப்பு ஊக்கத்தொகையாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அறிவு பரிமாற்றமே நோக்கம்
பின்னர் அவர் பேசுகையில், அடுத்த முறை கூடுதல் நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்வோம். உலக அறிவுலகத்தை நாம் அறிந்து கொள்வோம். அதேபோல், உலக அறிவுலகத்திற்கு தமிழை நாம் அறிமுகம் செய்வோம். அதேபோல், தமிழ் நூல்களை ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளோம். சர்வதேச புத்தக கண்காட்சி ஆண்டுதோறும் சென்னையில் நடத்த வேண்டும். உலகளாவிய அறிவுப் பரிமாற்றமே சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியின் நோக்கம் என்று தெரிவித்தார்.