மருத்துவ கவுன்சிலிங்.. மாணவர்கள் இருப்பிட சான்றிதழை ஆய்வு செய்ய 5 பேர் குழு.. அரசு அதிரடி முடிவு
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்போரின் இருப்பிடச் சான்றிதழை ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவடைந்த நிலையில் நேற்று முதல், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மருத்துவ கலந்தாய்வு துவங்கியது.
மருத்துவ கலந்தாய்வுக்கு வருகை தந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பங்கேற்று ஒதுக்கீடு ஆணை பெற்ற பிறகு நான்கு மாணவர்களுக்கு கொரோனா இருப்பதாக, பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று அறிகுறி தென்படவில்லை.
எனவே வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுடன் யார் யார் பழகினார்களோ, அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களும் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மருத்துவ படிப்பு கலந்தாய்வில் மொத்தம் 262 மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ் சரிபார்க்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
ஒரே மாணவர் வெவ்வேறு மாநிலங்களில் மருத்துவ கல்லூரி இடங்களுக்கு அப்ளை செய்வதால், இதை கண்டறிய ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே மாணவர் இரு இடங்களில், தரவரிசை பட்டியலில் வந்தால் அந்தந்த மாநிலங்களில் உள்ள மாணவர்களின் இடம் பறிபோக வாய்ப்பு இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில்தான், இந்த குழுவை சுகாதாரத்துறை அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவராக செல்வராஜ் உள்ளார். ராஜிவ் காந்தி, ஓமந்தூரார் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.