தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு!
Recommended Video
சென்னை: 2016 சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளனர்.
2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனித்து போட்டியிட்டு மீண்டும் ஆட்சியை பிடித்தது. 136 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஜெயலலிதா முதல்வராக பதவியில் அமர்ந்தார். 2016ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போதே உடல்நலக்குறைவுடன் தான் ஜெயலலிதா காணப்பட்டார்.
இதற்கிடையில் திமுக காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களை பெற்றது. இதன் மூலம் திமுக வலுவான எதிர்கட்சியாக மாறியது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஜுன் மாதத்தில் இருந்து தற்போது வரை ஜெயலலிதா, கருணாநிதி உள்பட 5 எம்எல்ஏக்கள் தமிழகத்தில் மரணமடைந்துள்ளனர்.
வாரணாசிக்கு போகிறோம்... மோடிக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்வோம்... அய்யாக்கண்ணு பேச்சு
திருப்பரங்குன்றம் எம்எல்ஏ
2106ம் ஆண்டு தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சீனிவேல் வெற்றி பெற்றார். ஆனால் அவர் எம்எல்ஏவாக பதவி ஏற்கும் முன்பே மேமாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.
ஆர்கே நகர் எம்எல்ஏ
அதன்பிறகு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் ஆர்கேநகர் தொகுதி எம்எல்ஏவும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
போஸ் மரணம்
சீனிவேல் மரணத்துக்கு பின்னர் சிலமாதங்களில் திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுக சார்பில் போட்டியிட்ட போஸ் அபார வெற்றி பெற்றார். ஆனால் அவரும் 2018ம் ஆண்டு ஆகஸ்டு 2ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
திருவாரூர் எம்எல்ஏ
வயோதிகம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் காரணமாக 2017ம் ஆண்டில் இருந்தே யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார் கருணாநிதி. அவரது உடல் நிலை கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உடல் உறுப்புகள் செயல் இழப்பு காரணமாக 2018ம் ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி உயிரிழந்தார்.
கனகராஜ் மரணம்
சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த கனகராஜ் இன்று (மார்ச் 21) காலையில் நாளிதழ் படித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சியினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இடைத்தேர்தல்
தஞ்சை, திருவாரூர் உள்பட 18 எம்எல்ஏக்கள் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதேபோல் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் சூலூர் எம்எல்ஏ கனகராஜின் மறைவால் சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே காலியாக உள்ள 3 தொகுதிகளோடு சேர்த்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.