எஸ்பிபி இறுதிச் சடங்கில் செய்தியாளர் உள்பட 5 பேரின் செல்போன்கள் திருட்டு
சென்னை: செங்குன்றத்திலுள்ள பண்ணை வீட்டில் எஸ்பிபியின் உடலுக்கு இறுதிச் சடங்கின் போது செய்தியாளர் உள்பட 5 பேரின் செல்போன்கள் திருடப்பட்டன. இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்னை சூளைமேட்டிலுள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்பிபி நேற்று மதியம் இதயம், நுரையீரல் செயலிழந்ததால் இந்த மண்ணை விட்டு விண்ணுலகம் அடைந்தார் எஸ்பிபி.
இந்த சம்பவத்தால் தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள ரசிகர்களும் திரைத்துறையினரும் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி வருகிறார்கள். இந்த நிலையில் அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் செங்குன்றத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைக்கப்பட்டது.
அங்கும் எஸ்பிபியின் உடலுக்கு மக்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அப்போது எஸ்பிபியின் குடும்ப வழக்கப்படி அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தார் மகன் எஸ்பிபி சரண். கூட்டம் அதிகமாக இருந்ததை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
நான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ரசிகன் அல்ல... ஆனால்!
அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் செல்போன் உள்பட 5 பேரின் செல்போன்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 12 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.