தொழிலாளர்களின் பசியாற்றிய 5 ரூபாய் பிஸ்கட் பார்லி ஜி... ஏழைகளின் பங்காளனாக திகழும் பார்லி நிறுவனம்
சென்னை: முழு ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பசியாற்றியதில் 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டான பார்லி ஜி முக்கிய பங்காற்றியிருக்கிறது.
80 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் அதன் விற்பனை விகிதம் பன்மடங்கு அதிகரித்துள்ளதோடு உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளும் எளிதில் வாங்கக்கூடிய வகையில் ரூ.5-க்கு பார்லி ஜி பிஸ்கட் கிடைப்பதால் இதனை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சூப்பர்.. ஒரே திட்டத்தில்.. அசரடித்த மத்திய அரசு.. புலம்பெயர் தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்ப்பு
1938-ம் ஆண்டு
கடந்த 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பார்லி பிஸ்கட் நிறுவனமானது 82 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. இதன் தயாரிப்பான பார்லி ஜி பிஸ்கட் பாக்கெட்களுக்கு மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக ஏழை எளியோர் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. காலையில் ஒரு பார்லி ஜி 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி தேநீரில் நனைத்து சாப்பிட்டு அன்றைய காலை உணவை முடித்துக் கொள்பவர்கள் ஏராளம்.
விலையேற்றமில்லை
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 3 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த பிஸ்கட் பாக்கெட் இப்போது 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் இதனை ஏழைகளால் எளிதாக வாங்க முடிகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களின் பசியை தீர்த்துள்ளது இந்த பார்லி ஜி பிஸ்கட். இதனால் வழக்கமான நாட்களை விட ஊரடங்கு காலத்தில் பன்மடங்கு இதன் விற்பனை உயர்ந்துள்ளது.
130 தொழிற்சாலைகள்
ஊரடங்கின் போது உணவு உற்பத்தி நிறுவனமான பார்லிக்கு விதி விலக்கு தரப்பட்டதால் லாக்டவுன் காலத்திலும் பார்லி ஜி பிஸ்கட் தயாரிப்புகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இதனிடையே தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரை தனி வாகனம் மூலம் வீடுகளில் இருந்து அவர்களை அழைத்து வந்து அழைத்து சென்று விடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது பார்லி நிறுவனம். நாடு முழுவதும் 130 இடங்களில் இந்த பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது.
குவியும் ஆர்டர்
கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் தொண்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், அரசுகளிடம் இருந்து இந்த பிஸ்கட் பாக்கெட்கள் கோரி ஆர்டர்கள் குவிவதாக கூறியிருக்கிறார், அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவு உயரதிகாரி மயான்க் ஷா. மேலும், இது தொடர்பாக ஆங்கில வணிக ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ள அவர், வழக்கமான நாட்களில் நாளொன்றுக்கு 130 தொழிற்சாலைகளில் 400 மில்லியன் பிஸ்கட்கள் தயாரிப்போம் என்றும் தங்களது ஒரு மாத உற்பத்தியை ஒரே அடுக்காக அடுக்கினால் பூமியையும், நிலவையும் இணைக்கும் தூரத்திற்கு அது நீளமாக செல்லும் என்றும் கூறியிருக்கிறார்.