தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா.. 50 பேர் டெல்லி வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்!
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லியில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுள் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா: பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாய் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி!
நடவடிக்கைகள்
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் 1,131 பேர் டெல்லியில் நிஜாமுதீனில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பினர். அவர்களுள் 615 பேரை கண்டுபிடித்துவிட்டோம். இன்னும 516 பேரை இன்னும் கண்டறிய முடியவில்லை. தமிழகத்திலிருந்து அந்த டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களாகவே முன்வந்து தெரிவித்தால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும். சமூகப் பரவலையும் தடுக்கலாம் என்றார்.
50 பேருக்கு கொரோனா
இந்த டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானாவிலிருந்து 6 பேரும், ஜம்முவிலிருந்து ஒருவரும் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டனர். அது மட்டுமல்லாமல் டெல்லியில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 பேருக்கும், தெலுங்கானாவில் 6 பேருக்கும், அந்தமானில் 10 பேருக்கும் காஷ்மீரில் ஒருவருக்கும், தமிழகத்தில் 50 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மசூதி
இந்த மத கூட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மொத்தம் 2100 வெளிநாட்டினர் கலந்து கொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக விலகலை புறந்தள்ளிவிட்டு 100-க்கும் மேற்பட்டோர் இந்த 100 ஆண்டுகால பழமையான மசூதியில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி முதல் தங்கியுள்ளனர்.
441 பேர் மருத்துவமனையில் அனுமதி
எனினும் கடந்த 22-ஆம் தேதி பிரதமர் ஊரடங்கு உத்தரவை அறிவித்தவுடன் டெல்லியில் நடக்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து முடக்கப்பட்டதால் அந்த மசூதியில் தங்கியிருந்த 1,548 பேரை வெளியேற்றிவிட்டதாகவும் கொரோனா அறிகுறி இருந்த 441 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.