பெங்களூருவில் இருந்து 50 கிலோ குட்கா கடத்தல்... சென்னையைச் சேர்ந்த இருவர் கைது
சென்னை: சென்னையில் 50 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு விரைவு மெயில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ குட்கா பொருட்களை சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடைவிதித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அந்தத் தடை இன்னமும் அமலில் இருக்கும் நிலையில், மாநிலத்தில் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதே நேரம், குட்கா தொடர்பான வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.
இருவர் கைது
அரக்கோணத்தை சேர்ந்த சசிக்குமார் (38), ஆவடி கண்ணிகாபுரம் பகுதியை சேர்ந்த நெமிசந்த் ஜெயின் (41) ஆகிய இருவரும் சேர்ந்து பெங்களூரில் இருந்து ரெயில் மூலம் குட்கா பொருட்களை மூட்டை, மூட்டைகளாக கொண்டு வந்துள்ளனர்.
தனிப்படை விசாரணை
சென்னையில் பெரம்பூர், மாதவரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் பெட்டிகடைகளில் விற்பனைக்காக இருவரும் தொடர்ச்சியாக விநியோகம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து, செம்பியம் காவல் ஆய்வாளர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதிகாலை சோதனை
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ரயில் மூலமாக தான் குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டு சென்னை பகுதிக்கு விநியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ரயிலில் நடத்திய சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
சிறையில் அடைப்பு
இது குறித்து செம்பியம் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களில் 12 வகையான பொருட்கள், 187 பாக்கெட்டுகள் என மொத்தமாக 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
முன்னதாக, அறப்போர் இயக்கத்தினர் வீடியோவுடன் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்திருந்தனர். அதில், வி.ஐ.பி. கேட் வழியாக குட்கா பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. எடை போடுதல், பரிசோதனை என எதுவுமின்றி மிகச் சுதந்திரமாக அவற்றைக் கடத்தல்காரர்கள் எடுத்துச் செல்கிறார்கள். ரயில்வேத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு தான் இந்தக் கடத்தல் நடந்து வருகிறது எனத் தெரிவித்திருந்தனர்.