கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு
சென்னை: கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள சுமார் 50 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் என மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதைத்தொடர்ந்து தடுப்பூசி பணிகளின் இரண்டாம் கட்டம் மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. 60 வயதைக் கடந்தவர்களும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்.. இன்னமும் 'களம்' காணாத ரஜினிகாந்த்
50 லட்சம் பேர் முன்பதிவு
இதற்கான முன்பதிவு கோ-வின் தளத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்ட பணிகள் குறித்துப் பேசிய கொரோனா தடுப்பூசி நிர்வாக குழுவின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, "இந்த அமைப்பில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை. தற்போதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ள 50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
கோ-வின் தளம்
கோ-வின் தளம் முதலில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டபோது, அதில் சில குறைபாடுகள் இருந்தன. ஆனால் அவை தற்போது முற்றிலுமாக சரி செய்யப்பட்டுவிட்டது. அதிக நபர்கள் முன்பதிவு செய்யும்போதும் அதைத் தாங்கும் வகையிலேயே கோ-வின் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள 6இல் 1 நபருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. இது மிகப் பெரிய ஒரு திட்டம்" என்றார்.
கொரோனா தடுப்பூசி
தற்போதுவரை நாடு முழுவதும் 1,48,55,073 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 67,04,856 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 25, 98,192 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 53,43,219 முன் களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 60 வயதைக் கடந்த மற்றும் 45 வயதைக் கடந்த உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களில் 2,08,791 பேருக்கு தற்போதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 15,593 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 1.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நேற்று 97 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் 1.57 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.