தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 11,760
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 3,37,841 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனா மரணங்கள் 81 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7114 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4406 ஆக உள்ளது. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.